Category Archives: மதியுரை என்றால் சும்மாவா

நம்ப வைத்தலே மதியுரையின் இலக்கு

உளநோய் உள்ளவர்களில் நம்பிக்கையற்ற நிலையைக் காணமுடியும். கடவுள் நம்பிக்கையோ தனியாள் நம்பிக்கையோ தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக அவர்களைப் பார்க்கமுடியும். அதனால் தான் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து வேறுபடுகின்றனர். இவர்களில் காணப்படும் நம்பிக்கையற்ற நிலையைப் போக்கினால் இயல்பு நிலைக்கு மீளவும் வந்துவிடுவர்.

ஆண்டவன் படைப்புகளான பகவத் கீதை, வேதாகமம் (பைபிள்), குர்ஆன், பௌத்த போதனைகள் போன்றவற்றில் உள்ள உண்மைகளை நடைமுறையுடன் ஒப்பிட்டு விளக்கி நம்ப வைக்கலாம்.

அன்பாகவும் பணிவாகவும் அணுகி உளநோய் உள்ளவர்களின் விருப்பத்துக்கு சற்று இசைந்து நம்மீது நம்பிக்கை ஏற்படவைக்கலாம். அந்நிலையில் எமது கருத்தேற்றங்களை (Suggestion) வழங்க முடியும்.

மேற்காணும் வழிகளில் நல்லெண்ணங்களை விரும்பவைத்து தன்னம்பிக்கை வைக்க முயற்சி செய்யலாம். இதனால் தன் (சுய) முடிவுகளை எடுக்கத் தூண்டலாம். உளநோய் உள்ளவர்கள் தாமாகவே தன்னம்பிக்கையுடன் இறங்கி வெற்றிகாணத் துணைநிற்பதால் அவர்களது தன் (சுய) முடிவுகளை எடுக்கும் ஆற்றலை வலுப்படுத்தலாம்.

நம்பிக்கை ஒன்றே நம்மை நெடுநாள் வாழவைக்கிறது. நம்பிக்கை தானே நாம் நன்நெறியில் செல்ல இடமளிக்கிறது. ஆயினும், நல்ல வழியில் நடைபோடத் தக்க நம்பிக்கையைப் பேணவேண்டும். அப்போது தான், நல்ல முடிவுகளை எடுக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒவ்வொருவரும் எடுக்கும் முடிவுகளே நல்ல தீர்வுகளைக் காண இடமளிக்கிறது. முடிவு (Decision) என்பது ‘கோயிலுக்குப் போதல்’ என்றால்; தீர்வு (Solution) என்பது நடந்து செல்வதா, மிதிவண்டியில் செல்வதா என்பதாகும்.

நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் ஒவ்வொருவரும் முடிவுகளை எடுக்கிறோம் என்பதை மறக்க முடியாது. நமது வசதிகளுக்கு ஏற்ற வகையிலேயே தீர்வுகளை முன்வைக்கிறோம் என்பதையும் மறக்க முடியாது.

எனவே, நம்ப வைத்தலே மதியுரையின் இலக்கு என்றாலும் நல்ல முடிவுகளையோ தீர்வுகளையோ எடுப்பதற்கு நம்பிக்கையான சூழல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதோடு நம்பிக்கையான உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அப்போது தான் உளநோய் உள்ளவர்களை இயல்பு நிலைக்கு வரவைக்கலாம்.

தன்னம்பிக்கையுடன் தன் (சுய) முடிவுகளை எடுக்கும் ஆற்றலைப் பெற்றுத் தானாகவே (சுயமாகவே) எந்தச் செயலிலும் இறங்கினால் தானே இயல்பு நிலைக்கு வந்தவர் எனலாம். இதற்கு மதியுரையின் போது உளநோய் உள்ளவர்களை நம்ப வைத்தலிலே வெற்றி காணவேண்டும்.

சாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்

அயலூரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் நான் பயணம் செய்த பேரூந்துக்குள் “எப்படிச் சுகம்” என்று கைகுலுக்கினார். பிறகென்ன நண்பர்கள் சந்தித்தால் பலதும் பத்தும் கதைப்பது வழக்கம் தானே! அப்படி கதைத்துக் கொண்டு பயணிக்கையில் ஒரு செய்தி என் உள்ளத்தைக் குத்தியது. அதனை உங்களுடன் பகிரலாம் என எண்ணி இப்பதிவை ஆக்கினேன்.

சாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும் தான் அந்த செய்தி. அதெப்படி நிகழும் என்பது உங்கள் கேள்வியாக இருக்கட்டும். எப்படி நடந்ததென நண்பர் எனக்குச் சொன்னவாறு அப்படியே சொல்லுகிறேன். பிறிதொரு அயலுரைச் சேர்ந்த இருபத்தினான்கு அகவை உடைய ஆண் சிங்கம் / ஆண் மகன் தனக்கு முதுகு வலிப்பதாக வீட்டில் உள்ளவர்களுடன் உரையாடியுள்ளான். அதைக் கேட்ட ஆச்சி (பாட்டி) ஒருவர் குறித்த மூலிகைச் செடியின் கிழங்கை எடுத்து உண்டால் முதுகுவலி நின்றுவிடுமெனக் கூறியுள்ளார். அகவையில் மூத்த ஆச்சி (பாட்டி) சொன்னால் பிழைக்காதென முதுகு வலிக்காரத் தம்பியும் உண்டுள்ளார். இருபத்தினான்கு மணி நேரம் கழித்து மறுநாள் மூச்சு பேச்சின்றி படுக்கையில் கிடந்துள்ளார். இதையறிந்த குடும்பத்தார் அரச மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் மருத்துவரும் ”எவ்வாறு நிகழ்ந்தது (History)” என்று கேட்க ஆச்சி (பாட்டி கூறிய வழிகாட்டலும் மதியுரையும் தான் இந்த நிலைக்குக் காரணமென உறவுகள் சொல்லி முடித்தனர். அடுத்த கட்டமாக மருத்துவரும் எல்லா வகைச் சோதனைகளையும் (Testings) செய்து முடித்தார். ஈற்றில் கிடைத்த பேறுபேற்றின் படி ”ஆச்சி (பாட்டி) காட்டிய கிழங்கைத் தின்ற முதுகுவலிக்காரத் தம்பியின் உடலில் நஞ்சு ஊறி உயிரை விட்டார்” என்று இருந்தது.

இச்செய்தி நமக்கு எதனைக் கூறி நிற்கின்றது. உண்மையில் எல்லோரும் சிந்திக்க வேண்டிய செய்தி என்பேன். அதாவது அகவையில் மூத்தோராயினும் சரி உளநல மதியுரைஞர் (Counsellor) ஆயினும் சரி கூறுகின்ற மருந்துகளை மருத்துவர் அனுமதி இன்றி உண்ண முடியாது. வழிகாட்டலும் மதியுரைகளும் கூறுவோர் மருந்துகளை வழங்கினால் குற்றம். மருந்து என்ற சொல் மருத்துவருக்குரிய உறவுச் சொல். எனவே, மருத்துவர் அனுமதியின்றி மருந்துண்டால் சாவு தான் முடிவென்பதை இச்செய்தி சுட்டி நிற்கின்றது.

அகவையில் மூத்தோரின் சொல்லுக் கேட்கலாம்; பெரியோரின் வழிகாட்டலைப் பின்பற்றலாம்; எவருக்கும் எவரும் மதியுரை கூறலாம்; உளநல மதியுரைஞரும் (Counsellor) வழிகாட்டலும் மதியுரையும் வழங்கலாம். ஆனால் மருந்து என்றால் மருத்துவர் மட்டுமே வழங்க முடியும். எனவே வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவோர் மருத்துவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்ய முடியாது. அப்படியாயின் அவர்களும் போலி மருத்துவர்களைப் போல போலிக் Counsellor தானே!

உண்மையான Counsellor நோயாளிகளை மருத்துவரிடம் சென்று காட்டுமாறு வழிகாட்டுவார். மருத்துவர் உடலில் நோய் இல்லை, உள்ளக் (மனக்) குறைபாடு என்று உறுதிப்படுத்திய பின்னரே உளநல வழிகாட்டலும் மதியுரையும் Counsellor வழங்க முடியும் என்பதை எல்லோரும் படியுங்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!

http://wp.me/p3oy0k-3M முதலிரு பகுதிகளையும் படித்த பின் வாசிக்கத் தொடரவும்

யாழ்பாவாணன் : MBBS மருத்துவத்தில உளவியல் இருக்கென்கிறியள், அதுதான் கேட்டேன்.

மருத்துவர் : தமிழாக்களிடம் ஒற்றுமை இன்மை வர அவரவர் சுயநலமே காரணம். ஒருவர் முன்னேற உதவாமல் தானும் முன்னேறத் துடிப்பது, உன்னைப் போல் அயலானையும் விரும்பு(நேசி) என்பதிற்குப்பதிலாக அயலானை விடத் தானுயர வேண்டுமென்பதற்காக அயலானை மதிப்பதில்லை, எதற்கெடுத்தாலும் தாழ்வுள(மன)ப் பாங்கு எனப் பல இருக்கு. தமிழாக்களிடம் ஒற்றுமை வரவேணுமென்றால் யார் குற்றினாலும் அரிசியாகட்டும் என்று ஆளுக்காள் ஒத்தழைப்பு வழங்கவேண்டும்.

யாழ்பாவாணன் : நம்ம தமிழாக்கள் படிப்பில புலிகள் அம்மா! இன்றைக்கும் தமிழரின் சொத்து படிப்புத்தானே! எப்படியோ அயலானை விடத் தானுயர எண்ணுவதில் பிழையில்லைத் தானே?

மருத்துவர் : பிழையில்லைத் தான். அயலார், சுற்றம், சூழல் எல்லோருக்கும் உதவி, ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு தானுயரவோ முன்னேறவோ முயன்றால் ஒற்றுமை தானாகவே வருமே! எதையும் நான்/நாம் செய்தால் தான் நல்லம் அடுத்தவர் செய்தாலும் நம்மினத்திற்கு நன்மை தருமென எண்ணாமல், அதனால் தனக்கு நற்பெயர் கிட்டாதென்ற தாழ்வுள(மன)ப் பாங்கு இருக்கும் வரை தமிழருக்குள் ஒற்றுமைக்கு இடமில்லையே!

யாழ்பாவாணன் : சரி போதும் அம்மா! நம்ம நாட்டு அரசு படிக்க வேண்டிய உளவியலையும்(Psychology) உளச்சிகிச்சைகளையும்(Psycho Therapy) எடுத்துக்கூறுவீர்களா? மக்கள் படும் துன்பங்களுக்கு அரசு தீர்வுகளை முன்வைக்க முடியாமல் முக்கிறதே… அதுதான் கேட்கிறன்?

மருத்துவர் : அரசுக்கு வழிகாட்ட என்னால முடியாதையா! நன்றியுடன் இவ்வளவோட நிற்பாட்டுங்கோ…

யாழ்பாவாணன் : இல்லை! இல்லை! மேலோட்டமாகவாவது கூறுங்களேன்?

மருத்துவர் : அரசோ அரசியல்வாதிகளோ அரச உயர்மட்டத் தலைவர்களோ அன்றி எல்லோரும் மனிதவள முகாமைத்துவமும் மேம்பாடும்(Human Resources Management and Development) படிக்கலாம். இதனால் அரச அமைப்புகளிற்கோ அரச சார்பற்ற அமைப்புகளிற்கோ தனியார் அமைப்புகளிற்கோ சிறு நிறுவனங்களிற்கோ மனிதவளத்தை சரியாகவும் முறையாகவும் பயன்படுத்த வழிகள் கிட்டுகின்றன.

யாழ்பாவாணன் : அதென்னங்க சரியாகவும் முறையாகவும் என்று ஒரு போடு ஒன்று போடுறியள்?

மருத்துவர் : ஆளணித் தேர்வில் துறைசார் அறிவாளிகளைத் தெரிவு செய்வது சரியாகவும் எனக் கருதுக; அவ்வவ் துறைக்கு அவ்வவ் துறைசார் அறிவாளிகளைப் பணிக்கு அமர்த்துதல் முறையாகவும் எனக் கருதுக. இதனால் குறைந்த மனிதவளத்துடன் அதிகூடிய வருவாயை ஈட்டலாம். ஆனால், அரசிற்கு வழிகாட்டியதாகக் கருத்திற் கொள்ளவேண்டாம்.

யாழ்பாவாணன் : மதிப்பிற்குரிய மருத்துவர் அவர்களே! தங்கள் படிப்பை நிறைவு செய்து வந்ததும் இடக்கு முடக்காக “ஆயிரம் ஆட்களைக் கொன்றவர் அரை மருந்துவர்” என்ற பழமொழியை வைத்து தொல்லை மேல் தொல்லை தரும் கேள்விகளைக் கேட்டுப்போட்டேன். அதற்கு முதலில தங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

மருத்துவர் : காலம் காலமாகக் கூறி வரும் பழமொழி தானே! மக்கள் நோய் குணமாகமல் உறவுகள் சாவடைந்த வேளை சொல்லிச் சொல்லி வந்த பழமொழி தானே!

யாழ்பாவாணன் : இனி நம்ம நாட்டு மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

மருத்துவர் : படிப்பு முடித்து முதன் முதலாக உங்கட ஊருக்குப் பணிசெய்யுமாறு கலைத்துப் போட்டாங்கள். வந்த கையோட நீங்களும் கையைக் குலுக்கிப் போட்டியள். ஐந்தாண்டுகள் மருத்துவப் படிப்பிற்குள்ளேயே இருந்த எனக்கு, மக்கள் மத்தியில் இத்தனை ஐயங்கள் இருக்கென்பதை உங்கள் மூலமாகத் தான் அறிந்தேன்.

வழி நெடுகக் கடைகளில் தொங்கிக் கிடக்கும் நூல்களின் தலைப்புகளைப் பார்த்தோ அல்லது அதனை வேண்டிப் படித்தோ இத்தனை அழகாகக் கேள்விகளைக் கேட்டியள். நூல்கள் நோய்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தவே தவிர, நூல்களை வைத்து மருத்துவம் நடாத்தவல்ல என்பதை அறிவீரா? மருத்துவம் என்ற சொல்லைப் பிற்சேற்கையாகக் கொண்ட தலைப்பிலான நூல்களில் மருத்துவமில்லை. மக்கள் இவ்வாறான நூல்களைப் படித்த பின் தமக்குத் தாம் மருத்துவம் செய்யக்கூடாது. எந்தப் பெரிய அறிஞராயினும் மருத்துவரை அணுகியே நோய்களைக் குணப்படுத்த முயலவேண்டும். இதனால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

முதன்மையாக ஆங்கில மருத்துவமும் அடுத்து சித்த ஆயுர்வேத மருத்துவமும் பேசப்படுகிறது. இன்று இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில் சிறப்பாக இயற்கை மருத்துவமும் படிப்பிக்கிறார்கள். மற்றைய மருத்துவங்களைப் பற்றி நான் எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

அறிவியல்(விஞ்ஞான) மாற்றங்களுக்கு ஏற்ப ஆங்கில மருத்துவமும் மேம்பாடு அடையும். எந்தப் புதிய நோய்களுக்கும் உடனடித் தீர்வைத் தருவதும் ஆங்கில மருத்துவமே! ஆங்கில மருந்துகளால் பாதிப்புகள்(பக்க விளைவுகள்) வர வாய்ப்பும் உண்டு. அதனை முன்கூட்டியே மருத்துவர்கள் அறிந்து, உடலைப் பாதிக்காத அளவிலேயே ஆங்கில மருந்துகளை அருமையாகப் பாவிக்க வழிகாட்டுகின்றனர். மேலும், மாற்று வழிகளைக் கையாண்டு நோய்களைக் குணப்படுத்தவும் வழிகாட்டுகின்றனர்.

எனவே, ஆங்கில மருந்துகளால் பாதிப்புகள்(பக்க விளைவுகள்) வருமென அஞ்சி மாற்று மருத்துவம் என்று எதனையும் நாடத் தேவையில்லை. சிறந்த பட்டறிவுள்ள ஆங்கில மருத்துவரை நாடினால் போதுமென்று இருந்துவிடாமல், இளைய மருத்துவரையும் நாடலாம். உயிரின் பெறுமதியுணர்ந்த, மருத்துவர்களின் ஒழுங்கிற்கமைய இளையவர்களால் முடியாவிட்டால்; அவர்களே சிறந்த பட்டறிவுள்ளவரிடம் காட்டிக்கொள்ள உதவுவரே! பின்னர் ஏன் தான், மக்கள் ஆங்கில மருத்துவத்தை வெறுத்து சாவைத் தேடி அலைகிறார்களோ எனக்குப் புரியவில்லை.

யாழ்பாவாணன் : தங்கள் பதில்கள் எல்லாம் மக்கள் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமென நம்புகிறேன். மேலும், நம்பிக்கை என்ற முறையில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் போலி மருத்துவர்களை, போலி உளநல மதியுரைஞர்களை அடையாளப்படுத்தி உள்ளீர்கள். ஆங்கில மருத்துவத்தை வெறுத்தவர்களையே; ஆங்கில மருத்துவத்தை விரும்பும் வகையில் உண்மையைக் கொட்டியுள்ளீர்கள். தங்களுடைய எல்லாக் கருத்துமே, மக்களைச் சரியான வழியில் செல்ல வழிகாட்டுகிறதே!

மருத்துவர் : மக்களுக்கு மருந்து கொடுக்கும் முன், நோய் பற்றிய தெளிவையும் மருத்துவத்தின் மீதான நம்பிக்கையையும் விளக்குவது மருத்துவரின் கடமை தானே!

யாழ்பாவாணன் : கன்னி மருத்துவரின் கன்னிக் கலந்துரையாடலாக இச்சந்திப்பு அமைந்துவிட்டது. உங்களைப் போன்று ஆங்கில மருத்துவர் எல்லோரும் நல்வழிகாட்டலுடன் சிகிச்சை அளிப்பார்களாயின்; ஆயிரமென்ன கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற இயலுமே! இத்துடன் நிறைவு செய்யலாம் தான்… ஆனால், “ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!” என்பது நம்மூரார் பேச்சுங்க… “ஆயிரம் வேரை அறிந்தவர் அரை மருத்துவர்!” என்று தான் பழங்காலப் பேச்சிருக்கே!

மருத்துவர் : யாழ். பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவபிடத் தோழிகள் சொல்லி எனக்குத் தெரியும்.

யாழ்பாவாணன் : இத்தனை கேள்விகளைக் கேட்டும் இதனை நீங்கள் நினைவூட்ட வில்லையே!

மருத்துவர் : உங்கட கேள்விகள் எவ்வளவுக்கு நீளும் என்று தான் அமைதியாக இருந்துவிட்டேன்.

யாழ்பாவாணன் : நீங்களும் யாழ். பல்கலைக்கழகத்தில் MBBS படித்த மிடுக்கோடு உறைப்பாகப் பதிலளித்ததை நானும் கண்டுகொண்டேன்.

மருத்துவர் : நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி.

யாழ்பாவாணன் : மிக்க நன்றி.

முடிவுரை:- நாட்டார் இலக்கியங்களில் “ஆயிரம் வேரை அறிந்தவர் அரைப் பரிகாரி” என்றிருக்கப் பின்னாளில் “ஆயிரம் பேரைக் கொன்றவர் அரைப் பரிகாரி” எனத் திரிபடைந்ததாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் எழுதிய நூலொன்றில் படித்தேன். (தமிழில் பரிகாரி – மருத்துவர், பரியாரி – முடிவெட்டுபவர் என்று அழைக்கப்படுகிறது.) அதனை அடிப்படையாகக் கொண்டு மருத்துவர் ஒருவருடன் சந்தித்து உரையாடியதாக எழுதியதின் நோக்கம்; மக்கள் உளநலம், உடல் நலம், ஆங்கில மருத்துவம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கே! இன்றைய உலகில் அமெரிக்கா தொட்டு எல்லா நாடுகளிலும் உளச்சிகிச்சை, உளநல மதியுரை நிலையங்கள் பெருகி வருகின்றன. இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, அதாவது மருத்துவச் சோதனை மேற்கொண்டு உடலில் நோய் இல்லையென்றும் உள்ளத்தில் தான் நோயென்றும் மருத்துவர் கூறினால் மட்டுமே இந்நிலையங்களை நாடலாம் என்பதை உறுதிப்படுத்தவே! மருத்துவரின் அறிவுரைப்படி உளநல வழிகாட்டலையும் மதியுரை(ஆலோசனை)யையும் நம்பிக்கையானவர்களிடம் பெறலாம் என முடிக்கிறேன்.

எனது இப்பதிவில் எந்த மருத்துவரும் பங்கெடுக்கவில்லை. எல்லாம் என் எண்ணங்கள்(யாவும் கற்பனை) என்று தான் சொல்ல வேண்டும். என் அறிவிற்கெட்டியவரை மருத்துவர், யாழ்பாவாணன் சந்தித்துக் கலந்துரையாடியதாக எழுதியிருக்கிறேன். மருத்துவர் பக்கத்திலிருந்து உளநல மதியுரைஞரை(Counsellor) ஐ நம்புவதைவிட மருத்துவரை நம்பலாம் என்றும் யாழ்பாவாணன் பக்கத்திலிருந்து ஆங்கில(MBBS) மருத்துவத்தில் மக்களுக்குள்ள ஐயங்களைத் துருவியும் உள்ளேன்.

இதிலிருந்து ஒரு நோயாளி மருத்துவரை(Doctor) முதன் நிலையிலும் உளநல மதியுரைஞரை(Counsellor) ஐ மருத்துவரை(Doctor)ச் சந்திக்க முன்னரான மதியுரை(ஆலோசனை) பெறவும் அல்லது மருத்துவரின்(Doctor) அறிவுறுத்தலின் படி மதியுரை(Counselling) மற்றும் உளச்சிகிச்சை(Psychotherapy) பெறவும் பாவிக்கலாம் என்பதைச் சுட்டியுள்ளேன்.

எப்படி இருப்பினும் “ஆயிரம் வேரை அறிந்தவர் அரைப் பரிகாரி” என்பதே சரி. அதாவது, நாட்டார் இலக்கியங்களில் கூறப்பட்டது. ஏன் அப்படிக் கூறியிருப்பார்கள் என்று உங்கள் மூளைக்கு வேலை கொடுத்தீர்களா? வேர்கள் பற்றிய அறிவு போதாதெனின் போலி மருத்துவர்கள் என்றும் கருதியிருக்கலாம். “ஆயிரம் வேரை அறிந்தவர் அரைப் பரிகாரி” எனின் அதற்கும் மேல் அறிந்தவர்கள் தான் முக்கால், முழுப் பரிகாரி என்றிருக்கலாம்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் இலைகள், இலைச்சாறு, பூக்கள், கனிகள், விதைகள், விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய், மரப்பட்டை என்பன மட்டும் மருந்தாகப் பாவிக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். வேர்களை அவித்துக் குடிக்கவும் பாவிக்கிறார்கள். மருத்துவர்கள் வேர்களில் இருந்து பல மருந்துகளையும் தயாரிக்கக் கூடும். சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் வேர்களின் முக்கியத்துவம் அறிந்தே இவ்வாறு தெரிவித்திருக்கவேண்டும்.

(முற்றும்)

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!

http://wp.me/p3oy0k-3K முதற் பகுதியைப் படித்த பின் வாசிக்கத் தொடரவும்

யாழ்பாவாணன் : உணவைத் தான் கால்வயிறு உண்டு, தண்ணீரைத் தான் கால்வயிறு குடித்து, அரை வயிற்றைச் சும்மா கிடக்க விட்டு வாழ்ந்தாலும் யோகாசனமும், உடற் பயிற்சியும் கடையில விற்கிற நூல்களைப் படித்துச் செய்யலாம் தானே? இதுகளால சரி, பாழாய்ப் போற மனிதன் சாகாமல் இருப்பானா?

மருத்துவர் : நீங்கள் சொல்கிற படி பார்த்தால், சாவு தான் பரிசாகக் கிட்டும். இந்து சமயப் பெரியார் ஒருவர் சொன்ன குறிப்புப்படி உணவு உண்ணலாம். ஆனால், அவை சமச்சீர் உணவாக இருக்க வேண்டுமே! யோகாசனமும், உடற் பயிற்சியும் கடையில விற்கிற நூல்களைப் படித்துச் செய்யக்கூடாதே!

யாழ்பாவாணன் : கட்டையில போகுமுன்னும் கைநாடி பிடித்துப் போட்டு “மூச்சுப் போச்சு” என்று சொல்லுகிற மருத்துவராலே சாவைத் தானே பரிசாகத் தரமுடியும். அதெல்லாம் ஆண்டவன் செயலென்று விடுவம். யோகாசனத்தையும், உடற் பயிற்சியையும் ஒழுங்கான ஆசிரியர் ஒருவரைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம். அதென்னப்பா சமச்சீர் உணவு?

மருத்துவர் : தனி உணவை வழக்கப்படுத்தாமல், எல்லா வகை (அரிசி, வரகு, சாமி, தினை, சோளம், குரக்கன், எள்ளு, பயறு, உழுந்து) தானியங்களையும் பனம் பண்டங்களையும் எல்லா வகைக் கறிகளையும்(இலைக் கறிகள் உட்பட, அவியல் கறிகளாக) சம அளவில் உணவில் சேர்த்து வருதல் வேண்டும். இதனால், உடலுக்கு வேண்டிய எல்லா வகை ஊட்டப் பொருளும் கிடைக்கிறது. சமச்சீர் உணவு என்றால் இதுதான். நாள் தோறும் சோறும் பருப்பும் பிட்டும் உண்டால் நோய்கள் தானே வரும்.

யாழ்பாவாணன் : என்ர தோட்டத்தில வரகு, சாமி, தினை விதைத்தாலும் வந்திடும். ஆனால், பனம் பண்டங்களை நிலாவிலிருந்து தான் இறக்க வேண்டி இருக்கே! அது சரி, தியானம் செய்ய நூல்கள் இல்லையா?

மருத்துவர் : தியானம் செய்யத் தானே இந்துக்களுக்குப் பன்னிரு திருமுறையும் பகவத்கீதையும், கிறிஸ்த்தவர்களுக்கு பரிசுத்த வேதாகமம்(பைபிள்), இஸ்லாமியருக்கு குர்ஆன், பௌத்தர்களுக்கு சித்தார்த்தனின்(புத்தரின்) போதனைகள் என ஒவ்வோர் மதத்திற்கும் உண்டே!

யாழ்பாவாணன் : உதுகளைப் படித்துக் கொண்டிருப்பது தானா தியானம்?

மருத்துவர் : இல்லை! ஆனால், உள்ளத்தை ஒருநிலைப்படுத்திப் பேணுதலே தியானம் என்போம். இவற்றைப் படிக்கும் போது இறைவனைத் தவிர பிற எண்ணங்கள் உங்கள் உள்ளத்தில் எழாவண்ணம் பேணுதலே தியானம் என்போம்.

யாழ்பாவாணன் : தியானத்துக்கும் கூட இப்ப கல்வி நிலையங்கள் திறந்தாச்சுங்க. அப்ப அதை விடுவோம். நோய்கள் நெருங்காமல் இருக்க உடற்பயிற்சி செய்யச் சொல்கிறாங்களே! உங்கட மருந்து வேலை செய்யாட்டி, உடற்பயிற்சி தான் நம்மாளுகளுக்கு உதவுகிறதோ?

மருத்துவர் : உடற்பயிற்சி செய்வதன் நோக்கம், உடலில் மேலதிகமாக இருக்கின்ற குளூக்கோஸை எரித்துக் குறைக்கத் தான். அப்படியாயின், நீரிழிவும் கட்டுப்படும்; நரம்புகளும் சுறுசுறுப்படையும்; குருதிச் சுற்றோட்டமும் இயல்பாக இடம்பெறும்; பாலியல் உறவைத் தூண்டவும் உதவும்; உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கும் ஆகையால் நீண்ட ஆயுளுடன் வாழலாமே!

யாழ்பாவாணன் : நானும் தேடிப் பார்த்தேன்… சந்திக்குச் சந்தி உடற்பயிற்சி பழக்கிற கடைகள் இல்லை அம்மா. எப்படியான பயிற்சிகள் செய்யலாம் என்பதையும் நீங்கள் தான் சொல்லணும் அம்மா?

மருத்துவர் : இரண்டு வகை உடற்பயிற்சி இருக்குங்க… முதலாவது மூச்சை அடக்கி வைச்சிருந்து விடும் நேரோபி அல்லது அன்ஏரோபிப்(Anaerobic) பயிற்சிகள். எடுத்துக்காட்டாக நீச்சல், பாய்தல், ஓடுதல் போன்றன. இரண்டாவது மூச்சை அடக்கி வைச்சிருக்காது செய்யும் ஏரோபிப்(Aerobic) பயிற்சிகள். எடுத்துக்காட்டாக கைவீசி நடத்தல், மெல்லிய துள்ளல், சிறிய வேக நடை போன்றன. ஏரோபிப் பயிற்சிகளை எவரும் செய்யலாம் பாருங்கோ, ஆனால் நேரோபிப் பயிற்சிகளை மருத்துவரின் வழிகாட்டலின் படியே செய்யவேண்டும்.

யாழ்பாவாணன் : உடற்பயிற்சி செய்யவும் உங்களைத் தான் கெஞ்ச வேணும் போல…?

மருத்துவர் : ஆங்கில(MBBS) மருத்துவம்; மருந்தைக் கொடுத்து ஆட்களைக் கொல்லாது. அருமையாக மருந்தை எடுத்துக் கொண்டு, மாற்று வழிகளில் நோயைக் குணப்படுத்த அறிவுரை கூறுகிறதே! மருத்துவரல்லாத ஒருவரிடம் மாற்று வழிகளைத் தேடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறோம்.

யாழ்பாவாணன் : அட, சிக்கல் அப்படிப் போகுதோ… மூச்சுப்பயிற்சி சொல்லிக்கொடுக்கிறோம் என்று கடைகள் நடத்துகிறாங்களே! அந்தப் பக்கம் தலையைக் காட்டலாமா?

மருத்துவர் : சிறந்த பட்டறிவுள்ள ஒருவரிடம் பயின்றால் கண்ட கண்ட கடைகளுக்குப் போகத் தேவையில்லையே! யோகாவில் மூச்சுப்பயிற்சியும் அடங்கியிருக்கிறதே! யோகாவையும் சிறந்த பட்டறிவுள்ள ஒருவரிடமே பயில வேண்டும்.

யாழ்பாவாணன் : காந்த சிகிச்சை, ரெய்கிச் சிகிச்சை, சொதிட சிகிச்சை, சித்தர் சிகிச்சை, பூ(மலர்) சிகிச்சை, மூலிகைச் சிகிச்சை என ஆயிரம் மருத்துவங்கள் சொல்கிறங்களே… அந்தந்த மருத்துவர்களும் ஆயிரக் கணக்கில ஆட்களைக் கொல்லுவாங்களோ?

மருத்துவர் : நாளுக்கொரு மருத்துவமென அலையிறவங்களுக்கு; முதலில் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். பின்னர் சரியான முடிவு, அதுவும் உயிரைக் காக்க வேண்டிய முடிவு எடுப்பது பற்றி விளக்கியாக வேண்டும். அதாவது, ஆங்கில(MBBS) மருத்துவரிடம் சென்றால் நோய் குணமாகும்; பிறகேன் ஆயிரத்தெட்டுச் சிகிச்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்றவாறு.

யாழ்பாவாணன் : யாரம்மா இப்படி எல்லாம் நம்மாளுகளுக்கு முடிவு எடுக்கப் படிப்பிக்கிறது?

மருத்துவர் : இதற்கென உளவியல் படித்த வழிகாட்டிகள் இருக்கிறாங்கள் தானே!

யாழ்பாவாணன் : MBBS ஆங்கில மருத்துவத்திற்குள்ளே தான் உளமருத்துவமும் இருக்கு என்கிறீர்கள்… அந்த உளவியல் வழிகாட்டிகளும் சந்திக்குச் சந்தி கடைபோட்டு உளமருத்துவம், உளச்சிகிச்சைகள், வழிகாட்டலும் மதியுரையும் எனக் கனக்கச் செய்யிறம் என்கிறாங்க… கடைசியில நம்மாளுகள் அங்கே போயும் அவங்களால சாவாங்களோ…?

மருத்துவர் : ஆமாம்! சாவாங்கள் தான். ஒருவருக்குத் தோளில சிறிய கட்டி பந்து போல வீங்கி இருந்தது. நம்மாளு வழிகாட்டிப் பெட்டிக் கடைக்குப் போயிருந்தார். அவங்களும் உளச்சிகிச்சை(Psycho Therapy), மதியுரை(Counselling) என இரண்டாண்டுகள் கடத்திச்சினம். அந்தாளோ ஈற்றில் என்னிடம் வரவே, படம் எடுத்துப் பார்த்திட்டு அக்கட்டியை வெட்டி எடுத்துப்போட்டேன். சில காலம் பிந்திப் போயிருந்தால், அக்கட்டி புற்றுநோயை ஏற்படுத்தலாம்.

யாழ்பாவாணன் : அடக்கடவுளே! ஆயிரம் ஆட்களைக் கொன்றவர் ஆங்கில மருத்துவர் என்றால், ஆயிரம் சொற்களால் வழிகாட்டுவோர் எத்தனை ஆட்களைக் கொல்லுவாங்கள்?

மருத்துவர் : கடவுளில பழியைப் போட்டுப் பயனில்லைப் பாரும். வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிப்பவர் நம்மாளுகளே(MBBS மருத்துவர்களே)! ஒருவரது உடலில் நோயில்லை என்றும் உள்ளத்தில் தான் இருக்கிறது என்றும் மருத்துவர் உறுதிப்படுத்திய பின்னரே வழிகாட்டலும் மதியுரையும் வழங்க முடியும். எனவே, நம்மாளுகள் முதலில் மருத்துவரை நாடியிருந்தால் சாவில்லையே!

யாழ்பாவாணன் : அப்படியென்றால், உளவியல் வழிகாட்டிகள் நம்மாளுகளுக்குத் தேவையில்லையே!

மருத்துவர் : நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும் நோய்களுக்குக் காரணமான உளப்புண்களை ஆற்றுப்படுத்துவதற்கும் எனப் பல தேவைகளுக்கு அவர்களது வழிகாட்டல்களைப் பயன்படுத்தலாமே!

யாழ்பாவாணன் : என்னங்க… அவங்களிடம் போனால் சாகலாம் என்கிறியள்… பிறகு, இப்படியும் அவங்களைப் பயன்படுத்தலாம் என்கிறியள்… இதுபற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்துங்க…

மருத்துவர் : இன்றைய உலகில் மாற்று மருத்துவமென உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) கருதப்படுகிறது. அதாவது, பெரும்பாலான நோய்களுக்கு உள்ளம் தான் காரணமாம். உள்ளத்தைத் தூய்மைப்படுத்தினால், உளப்புண்களை ஆற்றுப்படுத்தினால், உள்ளத்திலுள்ள சில எண்ணப்பதிவுகளை மாற்றினால் தீராத நோய்கள் சிலவற்றைக் குறைக்கலாம் அல்லது முற்றாக உடலைவிட்டு விரட்டலாம். அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் இதனை முதன்மைப்படுத்துகிறார்கள்.

யாழ்பாவாணன் : கையைக் காலை உடைச்சுப் போட்டு; உள்ளத்திற்கு மருந்து உள்ளமென கண்ட நின்ற இடத்தில் கடை திறந்து வழிகாட்டி என்போரை மக்கள் எப்படி நம்பிறது?

மருத்துவர் : அரச அனுமதிச் சான்று(Counsellor License) பெற்றிருந்தும் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தி உடலில் நோயில்லை என்று மருத்துவர் உறுதிப்படுத்தும் சான்றை ஏற்று உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) வழங்குவோரை நம்பலாம்.

யாழ்பாவாணன் : இதற்கெல்லாம் மருத்துவரை நாடத் தேவையில்லை; தங்களை நம்பினால் போதும் என்போரை மக்கள் எப்படி நம்பிறது?

மருத்துவர் : அப்படியானவர்களை நம்பக்கூடாது. அவர்களால் உடல் நோய்களை அடையாளப்படுத்த முடியாதே!

யாழ்பாவாணன் : நோய்களை அடையாளப்படுத்த முடியாத அவர்களை மக்கள் நம்பிச் சாவதா?

மருத்துவர் : இல்லை! ஒருவருக்கு உடல் நோய்கள் ஏதுமில்லை என மருத்துவரால் மட்டுமே சான்றுப்படுத்த முடியும். இந்த இந்த நோய்களுக்கு மருந்தில்லை என்றும் இந்த இந்த உளச்சிகிச்சைகளை(Psycho Therapy) வழங்கி இவ்வாறு உளநல வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) வழங்கலாம் என்பதையும் மருத்துவரே உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஏற்று மதியுரை(Counselling) வழங்குவோரை நம்பலாம்.

யாழ்பாவாணன் : அப்படி என்ன தான் உளவியலில் இருக்கென்று; இப்படி உளவியல் வழிகாட்டிகள் தங்களை நாடினால் நலமடையலாம் என்று உளறுறாங்களே!

மருத்துவர் : நாற்பதிற்கும் மேற்பட்ட உளவியலும்(Psychology) ஐம்பதிற்கும் மேற்பட்ட உளச்சிகிச்சை(Psycho Therapy) முறைகளும் இருக்கு. இவற்றைப் படித்தவர்களே மதியுரை(Counselling) வழங்குகின்றனர்.

யாழ்பாவாணன் : மதியுரை(Counselling) தருவோர் நாற்பதிற்கும் மேற்பட்ட உளவியலையும்(Psychology) ஐம்பதிற்கும் மேற்பட்ட உளச்சிகிச்சைகளையும்(Psycho Therapy) படித்திருப்பாங்களா?

மருத்துவர் : எல்லாம் படித்திருக்க வேண்டியதில்லை. துறைசார் உளவியலையும் (http://www.all-about-psychology.com/types-of-psychology.html) உளச்சிகிச்சைகளையும் (http://www.goodtherapy.org/types-of-therapy.html) படித்திருந்தால் போதும். துறைசார் படித்தறிவும் பட்டறிவும் நிரம்ப உள்ளவராலே தான் அத்துறைசார் சிக்கலுக்கான மதியுரையை(Counselling) வழங்கமுடியும்.

யாழ்பாவாணன் : துறைசார் அறிவு என்கிறியள், அதெப்படி இருக்கும்?

மருத்துவர் : அடிப்படைச் சிக்கலுக்குப் பொது உளவியல், குழந்தைகள் சிக்கலுக்கு குழந்தை உளவியல், கல்விச் சிக்கலுக்கு கல்வி உளவியல், சமூகச் சிக்கலுக்கு சமூக உளவியல், மதியுரைச் செயலுக்கு மதியுரை உளவியல் எனத் தனித்தனியே படித்திருந்தாலும் அவ்வவ் துறையில் பணியாற்றியும் இருக்கவேண்டும்.

யாழ்பாவாணன் : மக்களாய(சமூக)ச் சிக்கலுக்கு மக்களாய(சமூக) உளவியல் என்கிறியள், உலகை ஆண்ட தமிழன் தான் வாழ நாடின்றி இருக்கக் காரணமென்ன?

மருத்துவர் : நீங்கள் தானே அடிக்கடி ஒற்றுமை இன்மையால் தமிழன் அழிகிறான் என்று எழுதுகீறீர்கள். பிறகேன் என்னிடமும் கேட்கிறியள்.

அடுத்த பகுதியைப் படிக்க
http://wp.me/p3oy0k-3P

(தொடரும்)

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்!

மருத்துவத்துறையில் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அலோபதி, கோமியோபதி, சீன அக்குப்பங்சர், போதாக்குறைக்குப் பாட்டி/இயற்கை மருத்துவம் என ஏராளம் மருத்துவங்கள் காணப்படுகின்றன. இதற்கப்பால் மாற்று மருத்துவம் என வேறொன்றும் சொல்லுறாங்க… அதற்கப்பால் வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்), உளச்சிகிச்சை என வேறு பலவும் நம்மாளுகள் பேசிக்கொள்கிறாங்க… பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, வலைப்பூக்கள் என எல்லா ஊடகங்களிலும் மருத்துவங்கள் விளம்பரமாக மின்னுகிறது. இச்சூழலில் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து முடித்து வெளியேறிய அழகான பெண் மருத்துவரிடம் (MBBS) உங்கள் யாழ்பாவாணன் ஒரு பத்திரிகையாளராகத் தனது ஐயங்களைக் கேட்டுப் பகிர்ந்தளிக்கின்றார்.

photo

யாழ்பாவாணன் : ஆயிரம் ஆள்களைக் கொன்றவர் அரை மருத்துவர் என்கிறார்களே, அது உண்மையா?

மருத்துவர் : அண்ணை! உதெல்லாம் பழசுகளின் கட்டுக்கதை…

யாழ்பாவாணன் : பொய் சொல்லாதையுங்கோ! நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கை கூடுதே?

மருத்துவர் : அண்ணை! அதெல்லாம் நோயாளியை உரிய நேரத்தில மருத்துவரிடம் காட்டாமையே…

யாழ்பாவாணன் : இது பற்றிய அறிவை மக்களுக்கு யார் வழங்க வேண்டும்?

மருத்துவர் : நோயாளிக்கு, நோய் பற்றிய தெளிவும் நோயைக் குறைக்கவோ மீள வராமல் தடுக்கவோ என்ன செய்யலாம் என்பதை முதலில் அறிவுறுத்துகிறோம்.

யாழ்பாவாணன் : ஏனையோருக்கு என்ன செய்யலாம்?

மருத்துவர் : பொது அமைப்புகளும் படித்தவர்களும் ஊர் ஊராக விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்தி வழிகாட்ட முடியுமே!

யாழ்பாவாணன் : மருத்துவர் எல்லோரும் முதல் நோயாளியைக் குணப்படுத்த மாட்டாங்களாம் அல்லது சாக்காட்டிப் போடுவாங்களாமே!

மருத்துவர் : உதெல்லாம் பொய் அண்ணை! என்னுடைய கணவர் கூட, நான் படித்து முடித்துப் பணிக்கு வந்த போது முதலில் பார்த்த நோயாளி தானே!

யாழ்பாவாணன் : அதெப்படி?

மருத்துவர் : எனது முதல் நாள் அறிவரைப் படி, ஒழுக்கத்தைப் பேணி முறைப்படி மருந்தெடுத்தார். தீராத நோய் ஒன்றை முற்றாக விரட்ட, தொடர்ந்து ஆறு மாதம் என்னைச் சந்திக்க வேண்டியிருந்தது. முதலாம் நோயாளி என்றதால், நானும் பரிவு காட்டினேன். அதனாலே…

யாழ்பாவாணன் : மக்கள் புதிய மருத்துவர்களை விட்டிட்டு, பழைய மருத்துவர்களை நாடுவதேன்?

மருத்துவர் : பழைய மருத்துவர்களிடம் பட்டறிவு கூடுதலாக இருக்கலாம். ஆனால், புதியவர்களால் முடியாவிட்டால் பழையவர்களிடம் அல்லது சிறப்புத் தகுதியானவர்களிடம் ஒப்படைப்பார்கள் தானே!

யாழ்பாவாணன் : புதிய மருத்துவர்களாலே மருந்துகளை மாற்றிக் கொடுத்துக் குணப்படுத்த இயலாதா?

மருத்துவர் : குறித்த நோய்க்குக் குறித்த மருந்து தான்! ஆனால், ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டியது மருத்துவரின் கடமை. அதனாலேயே அப்படிச் செய்கிறோம்.

யாழ்பாவாணன் : சிறப்புத் தகுதியானவர்களால் எப்படிக் குணப்படுத்த முடிகிறது?

மருத்துவர் : பட்டறிவின் அடிப்படையில் மாற்றுவழிகளைக் கையாள்வதால் சாத்தியப்படுகிறது.

யாழ்பாவாணன் : வழி நெடுக மாற்று மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் இயங்குகின்றனவே, அவர்கள் ஆயிரம் ஆட்களைக் கொல்வாங்களா?

மருத்துவர் : மற்றைய மருத்துவங்கள் வேறு. மாற்று மருத்துவம் என்பது வேறு.

யாழ்பாவாணன் : மற்றைய மருத்துவங்கள் சிலவற்றைக் கூறுங்களேன்?

மருத்துவர் : இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, அலோபதி, அக்குப்பஞ்சர், அத்தோட பாட்டி மருத்துவம், தாத்தாவின் முறிவு, நெரிவு மருத்துவம் எனப் பல…

யாழ்பாவாணன் : இத்தனையும் இருந்தும் ஆங்கில மருத்துவத்தை விழுத்த முடியவில்லையே!

மருத்துவர் : மற்றைய மருத்துவங்களால் வீழ்ந்தவர்களைக் கூட நிமிர்த்த வல்லது ஆங்கில மருத்துவம் என்பதாலே…

யாழ்பாவாணன் : பச்சைப் பொய் சொல்லாதையுங்கோ… ஆங்கில மருத்துவத்தால தான் அதிகம் சாகிறாங்களே!

மருத்துவர் : எல்லா மற்றைய மருத்துவங்களிலும் காட்டிச் சுகப்படுத்த முடியாமல் தான் இறுதியில் ஆங்கில மருத்துவத்திடம் வருகிறார்கள். இயன்றவரை எல்லா உயிர்களையும் காப்பாற்றுகிறோமே! முதலில், உடனடியாக ஆங்கில மருத்துவத்திடம் வந்திருந்தால் சாவுகளைத் தடுத்திருக்கலாமே…

யாழ்பாவாணன் : பிறகும் பச்சைப் பொய்யைத் தானே சொல்லிறியள்… ஆங்கில மருந்தை விழுங்கி விழுங்கி சிறுநீரகம் சிதைந்து சாவதற்கு அஞ்சியே, மற்றைய மருத்துவங்களை நம்மாளுகள் நாடுகிறாங்களே…

மருத்துவர் : நீங்க சொல்லுறது நீலப் பொய்யே! மருத்துவர்கள் ஆங்கில மருந்துகளை வழங்கும் போது உடலைப் பாதிக்காத வகையில் தான் அறிவுரை கூறி வழங்குகின்றார்கள். பிறகு நோயாளர்கள் அஞ்சத் தேவையில்லையே!

யாழ்பாவாணன் : பிறகும் பச்சைப் பொய்யைத் தானே சொல்லிறியள்… எயிட்ஸ், புற்றுநோயை விட சிறுநீரகப் பாதிப்பாலே தான் சாவடைபவரே அதிகம் பாருங்கோ… இதற்கு என்ன காரணம்?

மருத்துவர் : முதலில், ஆங்கில மருத்துவத்தில பழி போடாதீங்க… எல்லா மருத்துவ மருந்துகளும் சிறுநீரகத்தைப் பாதிக்கச் செய்யும். எனவே, மருத்துவரின் மதியுரைப்படி விழுங்கினால் பாதிப்பு வராது.
முதலாவதாக நோயாளிகளில் சில தவறுகளும் உண்டு. அதாவது, தெருக் கடையில் தகுதியற்ற மருந்துக் கலவையாளர் (pharmacit) இருக்கலாம். கண் கண்ட நோய்க்கு தெருக் கடையில் மருந்து எடுத்தலும் மருத்துவர் அல்லாதவர் சொற்கேட்டு மருந்து விழுங்குதலும் தான் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இரண்டாவதாக நம்மாளுகள் மதுபானங்கள் மற்றும் உணவுடன் சேர்த்துண்ணும் போதைப்பொருள்கள், வேதியியல்(இரசாயன) பொருள் கலந்த உணவுகள்(எடுத்துக்காட்டாக, தெருவில் விற்கும் hot dogs-சுடுநாய் உணவுகள்) மற்றும் அற்ககோல் கலந்த குளிர்பானங்கள் உண்டு குடிப்பதாலும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒன்றை மட்டும் தெரிச்சுக்கணும் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய உணவுகளையோ குடிபானங்களையோ மருந்துகளையோ (அதாவது, மருத்துவர் வழிகாட்டலின்றி) உட்கொள்ளாமல் இருந்தால் இந்நோய் வரவே வராது.

யாழ்பாவாணன் : இப்ப ஒரு சின்னப் பொய் சொல்லிட்டியளே! எந்த வகையிலும் உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் தம்மிடம் இருப்பதாக எல்லா மற்றைய மருத்துவ மருத்துவர்கள் சொல்கிறார்களே… அது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மருத்துவர் : இப்ப தான் நீங்க ஒரு பெரிய பொய் சொல்லிறியள்… மற்றைய மருத்துவ மருத்துவர்கள் சொல்கிறது போல உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் உலகில் இல்லை. ஏதோ ஒன்று ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். எடுத்துக் காட்டாகப் பருப்பை நாள் தோறும் உண்டால் கூட நோய் வரலாம்.

யாழ்பாவாணன் : அப்படியென்றால், எந்த வகையிலும் உடலைத் தாக்காத, பக்க விளைவுகளோ பின் விளைவுகளோ தராத மருந்துகள் வழங்கும் மருத்துவம் எது?

மருத்துவர் : மாற்று மருத்துவம் தான்.

யாழ்பாவாணன் : மாற்று மருத்துவம் என்கிறீர்கள், அவர்களுக்கு எந்தப் பள்ளிக்கூடத்தில “மருத்துவர்” பட்டம் வழங்கிறாங்கள்?

மருத்துவர் : மாற்று மருத்துவம் என்றால் மருந்தில்லா மருத்துவம் தான். நோய்த் தொற்றுக்கள் ஏற்படாது தடுத்தல், நோய் தொற்றாமல் சூழலைச் சுத்தப்படுத்தல், உள்ளத் தூய்மை பேணல் ஆகியவற்றைக் கொண்ட வழிகாட்டலும் மதியுரையுமே (ஆலோசனையுமே). தொடக்க காலத்திலிருந்தே மருத்துவர்கள் தான் செய்து வருகிறார்கள். காலப் போக்கில் சிறப்பாக வழிகாட்டலும் மதியுரையும் கற்றவர்களாலும் இப்பணியைச் செய்யலாமென ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆயினும், இதற்கும் அரச அனுமதிச் சான்றிதல் (Licence) பெற்றிருத்தல் வேண்டும்.

யாழ்பாவாணன் : அப்படியென்றால், சந்திக்குச் சந்தி மாற்று மருத்துவம் செய்யும் நிலைய மருத்துவர்கள்; ஆயிரம் ஆள்களைக் கொன்றவர் அரை ஆங்கில மருத்துவர் என்றால், அவர்கள் ஆயிரக் கணக்கில கொல்லும் கால் மருத்துவராக இருப்பினமோ?

மருத்துவர் : உங்கள் பழமொழி எனக்கு வேண்டாம். உதை வைத்து, ஐந்து ஆண்டுகள் துன்பப்பட்டு படித்து வந்த மருத்துவரை உதைக்கவும் வேண்டாம்.

யாழ்பாவாணன் : எப்படியோ மக்கள் தானே சாகினம். அதை விடுவம். உணவு மருத்துவம் , தியான மருத்துவம், யோகா மருத்துவம் , உடற் பயிற்சி மருத்துவம், உள மருத்துவம் என்று கனக்க அளக்கினம் பாருங்கோ… பிறந்த மனிதன் இறக்காமலிருக்க, ஒரு மருத்துவமும் இல்லையே?

மருத்துவர் : பிறப்பும் இறப்பும் ஆண்டவன் செயல். நோயின்றி வாழ உதவுபவனே மருத்துவர். உணவு, தியானம், யோகாசனம், உடற் பயிற்சி (உள மருத்துவம் ஆங்கில மருத்துவத்திலேயே இருக்கிறது) என்பன உள, உடல் நலம் பேணுவதால் நோய்களை விரட்டலாம். இவை நோய் வருமுன் காக்க உதவும்.

அடுத்த பகுதியைப் படிக்க
http://wp.me/p3oy0k-3M

(தொடரும்)

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

வலைத்தள மதியுரைஞர்களைக் (Counsellor) கேட்பது சரியா?

நாளேடுகள், ஏழலேடுகள், மாதவேடுகள், வலைப் பூக்கள், வலைப் பக்கங்கள் என எதனூடாகவும் (கேள்வி – பதில் பகுதியூடாக) உளநல மதியுரை (Psychological Counselling) கேட்பது சரியா?

உளவியல், பாலியல் ஐயங்களைப் போக்கிக் கொள்ளவே நாளேடுகள், ஏழலேடுகள், மாதவேடுகள் எல்லாவற்றிலும் கேள்வி – பதில் பகுதி அமைத்திருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. போலிப் பெயர், போலி முகவரி வழங்கிக் கேட்கப்படும் கேள்விகளைக் கண்ணுற்றதும் இப்படித்தான் எண்ணத் தோன்றும். தங்கள் தங்கள் குறைகளைப் போக்கிக் கொள்ள இவ்வழியைக் கையாளுகிறார்கள் போலும்.

இன்றைய நாள்களில் வலைப் பூக்கள், வலைப் பக்கங்கள், கருத்துக்களத் தளங்கள் என எந்தப் பக்கத்திலும் இந்நிலை தொடருகிறது. இவற்றிலும் போலி மின்னஞ்சல் (Fack Mail), போலி அடையாளம் (Fack Id) காட்டுவோர் நிறையவவே உள்ளனர். 2010 இலிருந்து நானும் உளநல மதியுரை (Psychological Counselling) பல தளங்களில் செய்து வருகிறேன். அதனாலே தான் இதனை அறிய முடிந்தது. உளநலம், உடல்நலம் பற்றிக் கேட்பதை விட குடும்ப நல(பாலியல்) ஐயங்கள் தான் அதிகம் கேட்பார்கள். என் அறிவுக்கு எட்டிய வரை நானும் பதிலளிப்பேன்.

இவ்வாறு பதிலளிப்பவவர்களின் தகுதியை அறியாமல், தெரியாமல் வலைத்தளமூடாக தங்கள் ஐயங்களைக் கேட்பது பிழை என்றே நான் கூறுவேன்.

எடுத்துக்காட்டாக என்னைக் கருதினால், நான் மருத்துவர் இல்லை; அதேவேளை உளவியலில் பட்டப்படிப்புப் படித்தவருமல்லை. அப்படி இருக்கையில் என்னிடம் உங்கள் ஐயங்களைக் கேட்டால், நான் கற்ற உளவியல், உளப் பாலியல் அறிவோடு திருமணமாகிப் பதினைந்து ஆண்டு இல்லற வாழ்வைப் பட்டறிந்த (அனுபவ) அறிவையும் கலந்து பதிலளிப்பேன். அது சற்று உங்களைக் களிப்பூட்டினாலும் நிறைவைத் தரமுடியாது.

ஏன் தெரியுமா? உளநல மதியுரை (Psychological Counselling) என்பது உளச் சிக்கலைத் தீர்க்க உதவும் பணி. அப்படியாயின் உங்கள் உடலில் நோய்கள் இல்லை; உள்ளத்தில் குறை இருப்பதால் நிகழும் சிக்கல் என மருத்துவர் உறுதிப்படுத்தியபின் மதியுரைஞரை (Counsellor) நாடலாம். ஆனால், இணைய வழி உளநல மதியுரை (Psychological Counselling) வழங்குவோரிடம் (என் போன்றோரிடம்) தொடர்புகொள்வது நல்ல பயனைத் தராது.

அதாவது அருகிலுள்ள மருத்துவரோ (Doctor), மதியுரைஞரோ (Counsellor) உங்கள் நிலையை நேரில் கண்டறிவதால் பயன்தரும் நல்ல தீர்வுகளைத் தர வாய்ப்புண்டு. ஆனால், நீங்கள் விளக்கும் உங்கள் நிலையை வைத்து இணைய வழி உளநல மதியுரை (Psychological Counselling) வழங்குவோர், உங்கள் உண்மையான நிலையை நேரில் கண்டறியாமல் மதியுரை (Counselling) வழங்கினாலும் நன்மை கிட்டாதே!

எனது கருத்துப்படி, மதியுரை (Counselling) என்பது மருத்துவர் (Doctor) உடலில் நோய் ஏதுமில்லை; உள்ளத்தில் தான் சிக்கல் என்று உறுதிப்படுத்திய பின்னர்; நம்பிக்கைக்குரிய அல்லது மருத்துவர் குறிப்பிடும் மதியுரைஞரை (Counsellor) நேரில் சந்தித்து உங்கள் சிக்கலுக்குத் தீர்வு காணுங்கள். நேரில் சந்திக்க முடியாத ஒருவரிடம் மதியுரை (Counselling) பெற முயல்வது நல்ல பயனைத் தராது. உங்கள் கருத்தை வாக்களித்தோ பின்னூட்டமாகவோ தெரிவிக்கலாம்.

உளநல மதியுரையின் வெற்றி

தொடக்க காலத்தில் எல்லோரும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியாதிருந்தது. அக்காலத்தில் மருத்துவர்கள் மட்டுமே உளநல மதியுரை (Counselling) வழங்கி வந்தனர். பின்னைய காலகட்டத்தில் உளவியல் (Psychology), உளச்சிகிச்சை முறைகள் (Psychotherapy), உளப்பகுப்பாய்வு (Psycho Analysis) போன்ற பாடப் பகுதிகளைப் படித்தவர்களும் உளநல மதியுரை (Counselling) வழங்கலாம் என்ற நிலை காணப்பட்டதாக நூலொன்றில் படித்தேன். மருத்துவர்களின் நேரமின்மை காரணமாக இவர்களின் பங்களிப்பும் உளநோயாளிகளுக்கு உதவக்கூடும்.

மேலேகூறியவாறு உளநல மதியுரை (Counselling) பற்றிப் படித்தவர்கள் எல்லோரும் பணியாற்றக் களமிறங்கினால்; உள நோயாளிகள் நிலை என்னவாகும். சிலர் பொத்தகக் கடைகளில் தொங்கும் பொத்தகங்களை வேண்டிப் படித்தபின்; தம்மாலும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியுமென்பர். வேறு சிலர் தமது பட்டறிவை (அனுபவத்தை) வைத்துத் தம்மாலும் உளநல மதியுரை (Counselling) வழங்க முடியுமென்பர்.

“இவர்கள் எப்படியாவது அதை, இதை, உதைச் சொல்லி நோயாளிகளைத் தம் வழிக்கு வரவைக்க முயற்சிக்கலாம். ஆயினும், உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கருத்திற்கொள்ளாது உளநல மதியுரை (Counselling) வழங்கினால்; அவர்களது உளநோயைத் தணிப்பதற்குப் பதிலாக அதிகரிக்கச் செய்வதாகவே முடியும்.” என்றவாறு தமிழக முன்னணி உளநல மருத்துவர் ருத்ரன் அவர்கள் தனது நூலொன்றில் தெரிவித்திருந்தார். எனவே உளநல மதியுரை (Counselling) வழங்க முன்வருவோர் இதனைக் கருத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், உளநல மருத்துவர் ருத்ரன் அவர்களின் கருத்துப்படி உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கருத்திற்கொண்டு சாத்தியமான கருத்தேற்றங்களைச் (Suggestion) செய்வதன் ஊடாகவே அவர்களில் உளமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

உளநல மதியுரைஞர் (Counsellor) ஒரு நம்பிக்கைக்குரிய ஆளாகத் தோன்றவும் வேண்டும். அதேவேளை ஆற்றல் மிக்கவராகவும் இருக்க வேண்டும். இங்கு ஆற்றல் என்பது உளநல மதியுரைக்கு வேண்டிய அறிவாற்றலோ (Skill) கோட்பாடோ (Theory) அல்ல; உளநோயாளிகளின் உண்மையான எதிர்பார்ப்பையும் தேடல்களையும் கண்டுபிடிக்கும் ஆற்றலாகும்.

உளநோயாளி ஒருவர் உங்களை ஆற்றல் மிக்க ஒருவரென அறியமாட்டார். உளநோயாளி எப்போதும் நம்பிக்கை இழந்தவராகவே காணப்படுவர். எவர் எதைச் சொன்னாலும் எளிதில் நம்மமாட்டார். அதனால் தான், ஏதாவது ஓர் உளச்சிகிச்சை முறையைப் (Psychotherapy) பாவிக்கின்றோம். அதற்கு முன் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான எண்ணங்களைக் கருத்தேற்றம் (suggestion) செய்யலாம்.

அவ்வவ் மதத்தைச் சேர்ந்தவர்கள் (எடுத்துக்காட்டாக இந்து-பகவத்கீதை, கத்தோலிக்கம்-வேதாகமம்/பைபிள், இஸ்லாம்-அல்குர்ஆன், பௌத்தம்-புத்தரின் வழிகாட்டல்) ஏற்றுக்கொண்ட இறைமொழியில் எடுத்துக்காட்டுகளைப் பொறுக்கிக்காட்டி விளங்க வைக்கலாம்.

சூழலிலுள்ள பெரியவர் (எடுத்துக்காட்டாக: மக்களாயத் தலைவர்), துறைசார் அறிஞர், மதத் தலைவர், நம்பிக்கைக்கு உரியவர் என உளநோயாளி எளிதில் நம்பக்கூடிய ஒருவரின் கருத்தேற்றத்தைக் (suggestion) கூறிவைக்கலாம். எடுத்துக்காட்டாக மருத்துவர் கூறினால் நோய்க்குச் சரியான மருந்தென நம்பலாம்.

குடும்பம், சூழல் ஒன்றிணைந்து செயற்படும் செயல்களில் உளநோயாளியைப் பங்கெடுக்கச் செய்து சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம். இவ்வாறு உளநோயாளியின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கருத்தேற்றம் (suggestion) செய்வதனால் மட்டுமே உளமாற்றத்தை ஏற்படுத்த முடியும். எந்தவொரு உளநல மதியுரைஞரின் (Counsellor) ஆற்றலைவிட உளநோயாளியின் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஆற்றலே பெரிது எனலாம்.

உளநலம் பேண வேண்டுமெனின் உளநோயாளியின் சரியான, நேரான முடிவை நாமே ஊட்டிவிடுதல் அல்ல; சூழலை, தேவையை, பெறுதியை என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டிப் பொருத்தமான கருத்தேற்றங்களை (suggestion) வழங்க; உளநோயாளி தானாகவே முடிவெடுக்கும் நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். உளநோயாளி தானே முடிவெடுத்துத் தனது முயற்சிகளில் இறங்கி வெற்றிகாண வழிவிடும் போதுதான்; அவருக்குத் தன்னம்பிக்கை பிறக்கும். அத்தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதில் தான் உளநல மதியுரைஞருக்கு (Counsellor) வெற்றி கிட்டும்.

எனவே தான், உளநல மதியுரை (Counselling) என்பது திறமையைப் பாவித்துக் (Apply) காட்டுதலல்ல; நிறைவாகப் (Fluency) படித்து உளநலக் கோளாறால் வலுவிழந்தவரை நாட்டுக்குப் பயன்தரக்கூடிய வகையில் சுகப்படுத்தும் உயரிய பொறுப்பான பணியென உணர்ந்து செயற்படுவதாலே தான் வெற்றி காணமுடியும்.

உளநோயாளிக்கும் உளநல மதியுரைஞருக்கும் (Counsellor) இடையேயான நம்பிக்கையும் நல்லுறவுமே உளநல மதியுரைக்கு (Counselling) வெற்றியைத் தரும். அப்போது தான் உளநல மதியுரைஞரால் (Counsellor) உளநோயாளியைக் குணப்படுத்தலாம்.

உளப் பாதிப்புக்களிலிருந்து விடுபட நீங்கள் கூறும் மதியுரை என்ன?

குழந்தை தொடக்கம் கிழம் வரை ‘மக்கள்’ என்ற குழுவின் ஓர் உறுப்பினராகவே வாழ்கின்றோம். இங்குக் கருத்து முரண்பாடு, அடிபிடி கலகம், திட்டித் தீர்த்தல், ஒதுக்கி வைத்தல் எனப் பல நிகழலாம். இதனால் ஒருவரது உள்ளம் பாதிக்கப்படலாம். இதற்கு உங்கள் தெரிவு மருந்தாகட்டும்.

பாதிப்புற்றவரின் விருப்புக்கு அதாவது சூழலால் ஏற்கக்கூடிய ஒன்றுக்கு ஒத்துழைத்து அன்பாக அரவணைத்தல்.

புதிய சூழலுக்குள் புதிய உறவுகளுடன் விரும்பியவாறு வாழ வழிவிடுதல்.

நன்மை தரும் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்காமல் ஊக்கமளித்தல். புதிய உறவுகளை மேம்படுத்த இது உதவும்.

வெறுக்கும் உறவுகளைச் சந்திக்க விடாமலும் விருப்பம் இல்லாதவற்றைத் திணிக்காமலும் விரும்பாத நிகழ்வுகளுக்கு அனுப்பாமலும் பேணுதல்.

உளநல மருத்துவரின் மதியுரைப்படி நெருங்கிய உறவுகளில் ஒருவராக அணைத்து நல்லுறவைப் பேணுதல்.

நீங்கள் உங்கள் உளநல மதியுரைகளைப் (ஆலோசனைகளைப்) பின்னாட்டமாக இங்கே இடலாம். தங்கள் உளநல மதியுரைகளை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

பணம் பண்ணலாம் வாங்க!

பணம் பண்ணலாமோ?
எங்கையப்பா
அரசின்
பணம் அச்சடிக்கும் பொறியைக் களவெடுத்தனி?
பணம் பண்ணலாம் வாங்க என்றதும்
ஆளுக்காள்
இப்படிக் கேள்விக் கணைகளை
என் மீது ஏவிவிட்டனர்!
இத்தனைக்கும்
முகம் கொடுக்க முன்
பணம் பண்ணலாம் வாங்க என்றதும்
என்னைச் சூழ்ந்து கொண்ட
ஆட்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை!
பணம்
வாழ்க்கைக்குத் தேவை தான்
பணத்தைத் தேடும் வழி தான்
சரியானதாக இருக்க வேண்டுமே!
பணம் அச்சடிக்கும் பொறியை
அறிமுகம் செய்ய
நானொன்றும் பொறியியலாளரல்ல…
பணத்தைத் தேடும் வழியைச் சொல்லும்
மதியுரைஞர்(ஆலோசகர்) என்றதும்
கால் பங்கு கூடியோர்
ஓடி ஒளிந்தனர்!
பணத்தைத் தேடும் வழிகளில்
முதல் வழி கல்வி தான்…
விரும்பிய எல்லாவற்றையும்
கற்றுக்கொள் என்றதும்
கால் பங்கு கூடியோர்
ஓடி ஒளிந்தனர்!
பணத்தைத் தேடும் வழிகளில்
இரண்டாம் வழி சொத்துகள் தான்…
உழைத்த பணத்தை
நெற்காணி, வீட்டு நிலம் என்றும்
வீடுகள், கடைகள் என்றும்
வேண்டிக் கட்டி வைப்பதே என்றதும்
கால் பங்கு கூடியோர்
ஓடி ஒளிந்தனர்!
கல்வியும் தேடியாச்சு என்றாலும்
சொத்துகளும் தேடியாச்சு என்றாலும்
பணத்தைத் தேடும் வழிகளில்
மூன்றாம் வழி தான் முக்கியம்
அது தான்
முதலிரண்டையும்
முகாமைத்துவம் செய்யும் ஆளுமை என்றதும்
எஞ்சிய கூடி நின்றோரில்
அரைப் பங்கினர் ஓடி ஒளிந்தனர்!
பணம் பண்ணலாம் வாங்க என்று
வரச் சொல்லிப் போட்டு
“கல்வியா? செல்வமா? வீரமா?” என்று
திரைப்படமொன்றில சிவாஐி கேட்க
கல்வியும் செல்வமும் இருந்தால் போதாது
அதுகளைக் கையாளத் தெரிவது தான் வீரமென
திரைப்படமொன்றில எம்ஐிஆர் சொன்னதை
சொல்ல வந்திட்டியளே என்று
கூடி நின்ற எஞ்சியோரும்
ஓடி ஒளிய நாலு ஆள் நின்றனரே!
ஏனங்க
நீங்க நாலு ஆளும்
ஓடி ஒளியாமல் நிற்கிறியள் என்றதும்
நாமும் உங்களைப் போன்ற
மதியுரைஞர்(ஆலோசகர்) தானுங்க…
ஏதாவது உதவுங்க;
எல்லோரும்
உங்களைச் சுற்றிக் கூடி நிற்பாங்க…
கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவாங்க…
உங்கட நிழல் போல
ஒட்டிக் கொண்டும் வருவாங்க…
ஆனால்
இலவசமாகக் கிடைக்கும்
மதியுரையை(ஆலோசனையை) கேட்க
வரமாட்டாங்கள் என்று சொல்லவே
கால் கடுக்கக் காத்து நின்றோம் என்றனர்!
சொல் திறமை(புத்தி) கேட்காட்டிலும்
தன்(சுய) திறமை(புத்தி) இருந்தாலும் சரி
பட்டுத் தெளிந்தாலும் சரி
ஒவ்வொருவரும் வெல்லலாம் தானே…
மதியுரை(ஆலோசனை) என்பது
ஒவ்வொரு வெற்றியையும்
நம்பிக்கையுடன் விரைவில் பெற
உதவும் பொறி(கருவி) என்று கூறி
நானும் அந்நால்வரும் கலைந்தோம்!

குறிப்பு: உளநல மதியுரை(ஆலோசனை-Counselling) என்பது நோய் நெருங்காமல் முற்காப்பு எடுக்க மட்டுமல்ல, ஒவ்வொரு வெற்றியையும் நம்பிக்கையுடன் விரைவில் பெறவும் பாவிக்கலாம். பிறர் சொல்வதை இடது காதாலே வேண்டி வலது காதாலே வெளியில விடுங்கோ; அதற்குமுன் நன்மை தரும் நல்லெண்ணங்களை மூளையில்(உள்ளத்தில்) பதிவு செய்யுங்கள்.

ஆறுதலுக்கான ஆற்றுப்படுத்தல்

வாழ்வில் தலைநிமிர்ந்தோருக்குத் தான்
பெற்றோரின் பெறுமதி தெரியும்
படித்துப் புகழீட்டியவருக்குத் தான்
படிப்பின் பெறுமதி தெரியும்
வெற்றி பெற்றோருக்குத் தான்
உறவுகளின் பெறுமதி தெரியும்
வைப்பில் வைத்திருந்தவருக்குத் தான்
உழைப்பின் பெறுமதி தெரியும்
கெட்டுப்பட்டு அறிந்தவருக்குத் தான்
பாதிப்பின் பெறுமதி தெரியும்
இழப்புகளை எதிர்கொண்டவருக்குத் தான்
இழப்பின் பெறுமதி தெரியும்
ஆறுதலுக்கான ஆற்றுப்படுத்தல் என்பது
பெறுமதி தெரியாத வரை
நிறைவேற்ற இயலாத ஒன்றே!
தாயை இழந்த பிள்ளைக்கும்
தந்தையை இழந்த பிள்ளைக்கும்
வெவ்வேறு துயர் தான்…
கணவனை இழந்த மனைவிக்கும்
மனைவியை இழந்த கணவனுக்கும்
வெவ்வேறு துயர் தான்…
காதலனை இழந்த காதலிக்கும்
காதலியை இழந்த காதலனுக்கும்
வெவ்வேறு துயர் தான்…
பிள்ளையை இழந்த பெற்றோருக்கும்
உறவுகளை இழந்த உறவினருக்கும்
வெவ்வேறு துயர் தான்…
ஆனால்
வாழ்க்கை என்னும் வட்டத்தில்
பிறப்பும் இறப்பும்
இணைந்திருக்கும் இரண்டே!
இயற்கையை
எதிர்க்க முனைவதை விட
இயற்கையுடன் இசைந்து போவதே
நன்றாயினும்
முயற்சி உள்ள வரை
முயன்று பார்க்கலாம் என்பது
எளிமையான ஆற்றுப்படுத்தலே!
உண்மையை
மூடிவைக்க இயலாதது போல
துயரின் பெறுமதி
பாதிப்புற்றவரின் நலத்தில் தெரியும்…
உள்ளத்தில் இருப்பதை
கொஞ்சம் இறக்கி வைத்தால்
பாதிப்பின் பெறுமதியை
கொஞ்சம் பகுத்தறிய இயலும்…
வாழ்க்கை என்பது
எமக்குத் தரப்பட்ட ஒன்று
அதனை
வேண்டாமென வீசிக்கொள்ள
எமக்கு உரிமை இல்லைப் பாரும்…
இயற்கையுடன் இசைந்து
எமக்குக் கிடைத்த வாழ்வை
அணைத்துக் கொண்டு வாழ்வதே
எமது பணியாக வேண்டும் என்பதே
ஆறுதலுக்கான ஆற்றுப்படுத்தல் என்பேன்!