மணமுடிக்கிறோம்… பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறோம்… அவ்வளவுடன் குடும்ப வாழ்வு முற்றுப் பெறவில்லை. பெற்ற பிள்ளைகளைப் படித்தோராகாவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யக் கூடியவராகவும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மணவாழ்வின் வெற்றியைக் காணலாம்.
பிறந்த குழந்தையின் உள்ளம் எதுவுமே எழுதப்படாத ஏட்டைப் போன்றது. பிறந்த பின் வளர வளரக் குழந்தையின் உள்ளத்தில் பதிவுகள் எழுதப்படுகிறது. வளரும் குழந்தை நல்லெண்ணங்களைத் திரட்டிக் கொள்ளத்தக்கதாக “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என்றவாறு குழந்தையை வளர்க்க வேண்டும்.
குழந்தைகளின் நடத்தையை வைத்தே எல்லோரும் எடைபோடுவார்கள். குழந்தையின் உள்ளத்தில் இருப்பதே நடத்தையாக வெளிப்படுகிறது. குழந்தைகளின் நடத்தையை வைத்துப் பெற்றோர்களையும் அடையாளம் (நல்ல குழந்தையாயின் பெற்றோர் நன்றாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் கெட்ட குழந்தையாயின் பெற்றோர் வளர்ப்புச் சரியில்லை என்றும்) காணலாம்.
ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் நல்லெண்ணங்களை விதைத்தால் அவர்களது நடத்தைகளில் நல்ல அறுவடைகளைப் பெறலாம். மேலும், குழந்தைகளை நல்ல சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். அவ்வேளை சூழலில் இருந்து குழந்தை நல்லவற்றை உள்வாங்க இடமுண்டு.
குழந்தையின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட எண்ணங்கள் தான் எதிர்காலத்தில் அக்குழந்தை சிறந்தவராக உருவாக வழிவிடுகிறது. எனவே, பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது நல்லறிஞர்களாக உருவாக அன்பு, அறிவு, ஒழுக்கம் என நல்னவெல்லாம் ஊட்டப்படவேண்டும்.
அந்த வகையில் “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” என்ற பதிவை அந்திமாலை தளத்தில் கண்டேன். அதில் பதினைந்து வழிகாட்டல்கள் காணப்படுகிறது. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.