மணமுடித்தாச்சு, பிள்ளை பெற்றாச்சு, பிள்ளையைப் பள்ளியில் சேர்த்தாச்சு என்றளவில் தான் நம்மாளுகளின் அக்கறை காணப்படுகிறதே தவிர, பிள்ளையின் கூட்டாளிகள் யார்? அவர்களின் நடத்தைகள் எப்படி? பள்ளியில் பிள்ளை படிப்பிலா விளையாட்டிலா அக்கறை? பெற்றவர்களின் கண்ணில் படாமல் பிள்ளை என்னென்ன செய்யுது? பிள்ளையின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் விருப்பம் என்ன? ஆகிய கேள்விகளைத் தமக்குள் கேட்டுப்பார்த்துப் பிள்ளைகளைப் பேணுவது கிடையாது எனலாம்.
எடுத்துக்காட்டாகச் சீனாவில் ஒரு சிறுவனுக்கு IPOD தொலைபேசி வேண்ட விருப்பம். பெற்றோர் பிள்ளையின் விருப்பைப் பொருட்படுத்தவில்லையா அல்லது அதனைப் பிள்ளைக்கு வேண்டிக் கொடுக்க வசதி இல்லாதவர்களா என்பது இராண்டாம் கேள்வி. சிறுவன் தனது சிறுநீரகத்தை(Hidney) விற்று IPOD தொலைபேசி வேண்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது யாவரும் அறிந்ததே. அதில் சிறுநீரகத்தை விற்று IPOD தொலைபேசியுடன் சிறுவன் வீடு திரும்பியதும் விசாரித்த போது தான் பெற்றோருக்கே இந்த உண்மை தெரிந்ததாம் என்பது வேடிக்கையான ஒன்றாகும்.
பெற்றோர்களே! பிள்ளையைப் பெற்று வளர்த்து பள்ளியில் சேர்த்து விட்டால் போதாது. பள்ளி ஆசிரியர்கள் குறுகிய நேரத்துக்குள் கோடிக்கணக்கில் படிப்பிப்பதில் அக்கறை காட்டினாலும் உங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் உள்ள விருப்பங்களை அறியமாட்டார்கள். பிள்ளைகளுடன் பெற்றவர்கள் கூடிய நேரம் பழக வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்களை இயன்றவரை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அடித்து, நொறுக்கி, அச்சுறுத்திப் பிள்ளைகளை வளர்க்காமல் உங்கள் நண்பர்களுடன் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படி உங்கள் பிள்ளைகளுடன் பழகுங்கள். “அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்” என்பதற்கிணங்க அன்பாலே வளர்த்தெடுத்த பிள்ளைகள் தான் உங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாமல் முதுமையிலும் உங்களை தங்கள் வீட்டில் வைத்துப் பார்ப்பார்கள்.
எனவே உங்கள் பிள்ளைகளுக்கு சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் வரும்வரை உண்டு, படித்து, உறங்க ஒழுங்கு செய்வதோடு அவர்களது நடத்தைகளைக் கவனித்து அவர்களது விருப்பங்களை நிறைவேற்றிச் சிறந்தவர்களாக உருவாக்கும் கடமையும் பெற்றோர்களுக்கு இருக்கு என்பதையும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.