Category Archives: குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா?!

இனிய உறவுகளே!

குழந்தைகளைப் பெற்ற பின், அவர்களை வளர்த்தெடுப்பதில் தான் நாம் அதிகம் அக்கறை காட்ட வேண்டும். அப்படி வளர்த்தெடுக்கும் வேளை பெற்றோர் அன்பைச் செலுத்தி வளர்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாகக் குழந்தைகளின் விருப்பங்களுக்கு இணங்காது விட்டால், குழந்தைகள் அதனை அடையும் வரை அழலாம் அல்லது கோபம் கொண்டு எதையாவது தூக்கி எறியலாம் அதேவேளை எதையாவது அடித்து நொருக்கலாம்.

அவ்வேளை பெற்றோர் தமக்குக் கோபம் வராமல் தம்மைப் பேணுவதோடு; குழந்தைகளின் கோபத்தை அன்பால் தணிக்க முன்வரவேண்டும். குழந்தைகளின் நல்ல செயற்பாடுகளுக்கு ஊக்கமும் கொடுக்க வேண்டும்.

இத்தனையும் அறிஞர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் உளநல வழிகாட்டலைக் கருதிற்கொள்ள, கற்றுக்கொள்ளக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!.

via  குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!.

“குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா?!” என்ற கேள்வியை உங்கள் முன் போட்டுடைத்த பின் பதிலைத் தராமல்; நான் எங்கேனும் பறக்க இயலாதே! ஆகையால், என் பதிலைத் தருகின்றேன். முரண்பட்டால் என் மீது சொல் எறியலாம்.

குழந்தைகளின் செயலைக் கண்டு பெற்றோர் கோபம் அடைந்தால், குழந்தைகளுக்கு அடித்துப் பயமுறுத்தலாம். அச்செயல் குழந்தைகளின் உள்ளத்தை விட்டு நீங்குமா? இல்லை! ஆகையால் குழந்தைகள் பெற்றோரை எதிரியாகத் தான் பார்ப்பர். அதனால், குழந்தைகளுக்குப் பெற்றோர் மீது வெறுப்பு ஏற்படாலாம்.

குழந்தைகளின் செயலைக் கண்டு பெற்றோர் அன்பு காட்டி, சிரிக்க வைத்து, அவர்களை அள்ளி அணைக்க வேண்டும். அச்செயல் குழந்தைகளின் உள்ளத்தை விட்டு நீங்குமா? இல்லை! ஆகையால் குழந்தைகள் பெற்றோரை அன்பானவர்களென ஏற்றுப் பதிலுக்கு அன்பை வெளிப்படுத்துவர். அதனால், குழந்தைகளுக்குப் பெற்றோர் மீது அன்பு தான் அதிகரிக்கும்.

அப்படியாயின், குழந்தைகளுக்கு வேண்டியவர் யார் தெரியுமா?!
குழந்தைகள் மீது அன்பு காட்டும் உள்ளங்களே, குழந்தைகளுக்கு வேண்டியவர் ஆகின்றனர்.

குழந்தைகளுடன் பழகுவது எப்படி?

“தென்னையைப் பெத்தா இளநீரு
பிள்ளையைப் பெத்தா கண்ணீரு” என்று
பாடித் திரிவதில் பயனில்லைக் காணும்
“தென்னையை வளர்த்தால் உடற்பயிற்சி
பிள்ளையை வளர்த்தால் உளப்பயிற்சி” என்று
கொஞ்சம் எண்ணிப் பார்த்தால் என்ன?

என்ன காணும்… எப்படி எல்லாம் எண்ணிப் பார்க்கிறியள்? தென்னம் பிள்ளை வைத்து ஆடு, மாடு கடிக்காமல் வேலி போட்டுப் பசளை இட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்தெடுக்க எப்பாடுபட்டிருப்பியள்? எல்லாம் உடற்பயிற்சியாக இருக்குமென நம்பிச் செய்தியளா? அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து தென்னையை வளர்த்ததன் பயனாகத் தானே இளநீரும் தேங்காயும் கிடைக்கிறது.

அதே போலப் பிள்ளையைப் பெத்ததும் அப்படி, இப்படி, உப்படி வளர்ப்பு முறை தெரிந்து வளர்த்தெடுத்தால் பின் நாளில் நன்மை உண்டாம்.

அடித்து நொருக்கிக் குழந்தையை வளர்த்தால் பிள்ளைக்கு உங்கள் மீது வெறுப்பு வர பிரியும் வாய்ப்பு பின் நாளில் வர நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடும்.

அங்கும் மிங்கும் நடத்திக் காட்டி, அன்பு என்னும் தேன் கலந்து, அறிவு என்னும் பால் கலந்து, சத்துள்ள உணவூட்டி வளர்த்துப் படித்த ஆளாக்கினால்:
பிள்ளை எந்நாளும் அன்பு காட்டும்.
பிள்ளை படித்த ஆளாகியதும் பெற்றோருக்குத் தானே பெருமை சேரும்.
பின் நாளில் நீங்கள் முதியோர் இல்லம் செல்ல நேரிடாது.
வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை வந்தே சேரும்.
இன்னும் நீட்டலாம்…

அதற்கு முன், ஒரு மணித்துளி எண்ணிப் பாருங்கள். உங்கள் குழந்தைகளின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டீர்களா? “வாய் பேசாக் குழந்தை என்னத்தைக் கேட்கும், நாம் என்னத்தைச் செய்யிறது” என்று நீங்கள் வாயைப் பிளக்கிறியளே! இதற்குத் தான் தாய்மாருக்கு உளப்பயிற்சி தேவை என்கிறது.

உளவியல் என்றால் உள்ளம் பற்றிய அறிவு தான். குழந்தையின் உள்ளம் எதை விரும்புதோ அதை அடைய அழுது காட்டும். அதனாலே தான் குழந்தை அழுதவுடன் தாய் பாலூட்டுவதைக் காண்கிறோம். சற்று வளர்ந்த குழந்தை முன்னே இனிப்பைக் காட்டினால் அதை அடையும் வரை அழுதே தீரும். அவ்வேளை கொஞ்சமாய் இனிப்பைக் கொடுத்த பின் மிகுதியை ஒளித்து வைக்கும் தாயைப் பார்த்திருப்பியள். இதெல்லாம் அத்தாயின் உளப்பயிற்சி என்பேன்.

பிறந்த குழந்தை, வளர்ந்த பின், வாய்ப் பேச்சு வந்த பின், குழந்தை விரும்புவதைப் புரிந்துகொண்டு செயற்படுகிறீரா? இல்லை என்றே நான் கூறுவேன். ஓர் எடுத்துக்காட்டு:

உணவூட்ட நீங்கள் நீட்டலாம், ஆனால், குழந்தை வேண்டாம் என்கிறது. உடனே என்ன செய்கிறியள்?

சிலர் பேய் பிடிக்கும், காகம் கொத்தும் கெதியாச் சாப்பிடு என்று அச்சமூட்டி உணவூட்டுவர்.

சிலர் படம் காட்டி, நிலவைக் காட்டி, பக்கத்தில் உள்ள பிள்ளைக்கு ஊட்டிக்காட்டி உணவூட்டுவர்.

எனவே இரண்டாவதாகக் காட்டிய வழியே சிறந்தது என்பேன். எமக்கு மட்டும் உள்ளம் இருப்பதாக எண்ணிவிடாதீர்கள்; பிறந்த குழந்தைக்கும் உள்ளம் இருக்கிறது. குழந்தை வளர்க்கும் போது தான் குழந்தையின் உள்ளத்தில் ஒவ்வொன்றாக எழுதப்படுகிறது. அதனால் தான் குழந்தை வளர்ப்பு முதன்மை பெறுகிறது.

இன்னோர் எடுத்துக்காட்டு:

வாயைப் பிளக்கும் குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை பெற்றோர் வழங்காமை, குழந்தை மாற்று வழியில் எண்ணமிடும். அதாவது, கிணற்றடிக்குப் போகும் வேளை “எங்கேயம்மா போறியள்” என்றால் “இருங்கோ இப்ப வாறன்” என்பியள்.

இது குழந்தைக்கு நிறைவு தராமையால், தாயைத் தொடர்ந்து குழந்தையும் நடைபோடும். விளைவு: தாய் குழந்தையைத் திரும்பிப் பார்க்காவிட்டால், வழித்தடங்கலில் குழந்தை விழுந்துவிட நேரிடுகிறது. இந்நிலை வராமைப் பேண முதலில் இன்னொரு உறவிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டுச் செல்லலாமே!

இப்படித்தான் குழந்தைகளுடன் பழக வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ப, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப தாய் பழக வேண்டும். குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்பகமான, நிறைவு தரும் பதிலை வழங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சுத்து மாத்துப் பதிலை வழங்கினால் குழந்தை மாற்று வழியில் எண்ணமிட்டு தவறான வழியில் செல்ல இடமுண்டு.

எனவே, இது பற்றிய அறிவை “எப்படி இத்தனை கேள்விகள் கேட்கின்றன இந்தக் குழந்தைகள்?” என்ற அறிஞர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் பதிவைப் படித்துப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். மேலும், அவரது குழந்தை வளர்ப்புத் தொடரைத் தொடர்ந்து படியுங்கள். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://wp.me/p2IA60-2iN

பெற்றோர்கள் கவனத்திற்கு…

மணமுடித்தாச்சு, பிள்ளை பெற்றாச்சு, பிள்ளையைப் பள்ளியில் சேர்த்தாச்சு என்றளவில் தான் நம்மாளுகளின் அக்கறை காணப்படுகிறதே தவிர, பிள்ளையின் கூட்டாளிகள் யார்? அவர்களின் நடத்தைகள் எப்படி? பள்ளியில் பிள்ளை படிப்பிலா விளையாட்டிலா அக்கறை? பெற்றவர்களின் கண்ணில் படாமல் பிள்ளை என்னென்ன செய்யுது? பிள்ளையின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் விருப்பம் என்ன? ஆகிய கேள்விகளைத் தமக்குள் கேட்டுப்பார்த்துப் பிள்ளைகளைப் பேணுவது கிடையாது எனலாம்.

எடுத்துக்காட்டாகச் சீனாவில் ஒரு சிறுவனுக்கு IPOD தொலைபேசி வேண்ட விருப்பம். பெற்றோர் பிள்ளையின் விருப்பைப் பொருட்படுத்தவில்லையா அல்லது அதனைப் பிள்ளைக்கு வேண்டிக் கொடுக்க வசதி இல்லாதவர்களா என்பது இராண்டாம் கேள்வி. சிறுவன் தனது சிறுநீரகத்தை(Hidney) விற்று IPOD தொலைபேசி வேண்டியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது யாவரும் அறிந்ததே. அதில் சிறுநீரகத்தை விற்று IPOD தொலைபேசியுடன் சிறுவன் வீடு திரும்பியதும் விசாரித்த போது தான் பெற்றோருக்கே இந்த உண்மை தெரிந்ததாம் என்பது வேடிக்கையான ஒன்றாகும்.

பெற்றோர்களே! பிள்ளையைப் பெற்று வளர்த்து பள்ளியில் சேர்த்து விட்டால் போதாது. பள்ளி ஆசிரியர்கள் குறுகிய நேரத்துக்குள் கோடிக்கணக்கில் படிப்பிப்பதில் அக்கறை காட்டினாலும் உங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் உள்ள விருப்பங்களை அறியமாட்டார்கள். பிள்ளைகளுடன் பெற்றவர்கள் கூடிய நேரம் பழக வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்களை இயன்றவரை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அடித்து, நொறுக்கி, அச்சுறுத்திப் பிள்ளைகளை வளர்க்காமல் உங்கள் நண்பர்களுடன் எப்படிப் பழகுகிறீர்களோ அப்படி உங்கள் பிள்ளைகளுடன் பழகுங்கள். “அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்” என்பதற்கிணங்க அன்பாலே வளர்த்தெடுத்த பிள்ளைகள் தான் உங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாமல் முதுமையிலும் உங்களை தங்கள் வீட்டில் வைத்துப் பார்ப்பார்கள்.

எனவே உங்கள் பிள்ளைகளுக்கு சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் வரும்வரை உண்டு, படித்து, உறங்க ஒழுங்கு செய்வதோடு அவர்களது நடத்தைகளைக் கவனித்து அவர்களது விருப்பங்களை நிறைவேற்றிச் சிறந்தவர்களாக உருவாக்கும் கடமையும் பெற்றோர்களுக்கு இருக்கு என்பதையும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டும்.

படிப்பில் வெற்றி பெற

கண்ட கண்ட
அழகிகளைக் கண்டாலும்
காதல் ஆகாமல்
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏதும்
காதில் விழுத்தாமல், கண்ணில் படாமல்
கண்ட கண்ட பொத்தகங்களில்
பார்வையை விழுத்திப் படித்தேன்
மருத்துவரானேன் என
படித்தவன் ஒருவன் சொல்கிறான்!
கண்ட கண்ட
பொடியளோட பழகாமலும்
காதல் ஆகாமலும் ஒதுங்கியே
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சி ஏதும்
கண்ணில் படாமலும் காதில் விழுத்தாமலும்
சமையற்கூடம்
எட்டிப் பார்க்காமலும்
வைத்த கண் வாங்காமல்
பொத்தகங்களைப் படித்தேன்
பொறியலாளரானேன் என
படித்தவள் ஒருவள் சொல்கிறாள்!
என்ர பிள்ளை குட்டிகளுக்கு
படி படியென்று – நான்
எத்தனை எத்தனை
படித்தவன், படித்தவள் கதை சொல்லியும்
படிக்கிறதக் கண்டதில்லையே!
உண்மையிலேயே
தாங்களாகவே உணர்ந்து படித்தால் தானே
படிப்பு வருமென்று
என்ர அப்பன்
எனக்குரைத்ததைத் தானே
மீட்டுப் பார்க்க முடிகிறதே!

 

பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது.

மணமுடிக்கிறோம்… பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறோம்… அவ்வளவுடன் குடும்ப வாழ்வு முற்றுப் பெறவில்லை. பெற்ற பிள்ளைகளைப் படித்தோராகாவும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யக் கூடியவராகவும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மணவாழ்வின் வெற்றியைக் காணலாம்.

பிறந்த குழந்தையின் உள்ளம் எதுவுமே எழுதப்படாத ஏட்டைப் போன்றது. பிறந்த பின் வளர வளரக் குழந்தையின் உள்ளத்தில் பதிவுகள் எழுதப்படுகிறது. வளரும் குழந்தை நல்லெண்ணங்களைத் திரட்டிக் கொள்ளத்தக்கதாக “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்” என்றவாறு குழந்தையை வளர்க்க வேண்டும்.

குழந்தைகளின் நடத்தையை வைத்தே எல்லோரும் எடைபோடுவார்கள். குழந்தையின் உள்ளத்தில் இருப்பதே நடத்தையாக வெளிப்படுகிறது. குழந்தைகளின் நடத்தையை வைத்துப் பெற்றோர்களையும் அடையாளம் (நல்ல குழந்தையாயின் பெற்றோர் நன்றாக வளர்த்திருக்கிறார்கள் என்றும் கெட்ட குழந்தையாயின் பெற்றோர் வளர்ப்புச் சரியில்லை என்றும்) காணலாம்.

ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் நல்லெண்ணங்களை விதைத்தால் அவர்களது நடத்தைகளில் நல்ல அறுவடைகளைப் பெறலாம். மேலும், குழந்தைகளை நல்ல சூழலில் வைத்து வளர்க்க வேண்டும். அவ்வேளை சூழலில் இருந்து குழந்தை நல்லவற்றை உள்வாங்க இடமுண்டு.

குழந்தையின் உள்ளத்தில் விதைக்கப்பட்ட எண்ணங்கள் தான் எதிர்காலத்தில் அக்குழந்தை சிறந்தவராக உருவாக வழிவிடுகிறது. எனவே, பிள்ளைகளை அள்ளி அணைத்தால் போதாது நல்லறிஞர்களாக உருவாக அன்பு, அறிவு, ஒழுக்கம் என நல்னவெல்லாம் ஊட்டப்படவேண்டும்.

அந்த வகையில் “உங்கள் குழந்தைகள் நல் ஒழுக்கமாக, புத்திசாலியாக வளர” என்ற பதிவை அந்திமாலை தளத்தில் கண்டேன். அதில் பதினைந்து வழிகாட்டல்கள் காணப்படுகிறது. அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

http://anthimaalai.blogspot.com/2014/05/blog-post_3053.html