மனிதன் சுறுசுறுப்பாக இருக்கிறான் என்றால் மூளையும் அவ்வாறே இயங்கும். மனிதன் தூங்கிவிட்டால் மூளையும் அவ்வாறே தூங்காது விழித்துக்கொண்டே இருக்கும். அவ்வேளை மூளை என்ன செய்துகொண்டிருக்கும்? மனிதன் தூங்குமுன் பதிவு செய்து வைத்திருந்த தகவலை மீள வாசித்துக்கொண்டிருக்குமாம். அதாவது, ஒலிப்பதிவு கருவியில் (Tape Recorder இல்) பதிவு செய்ததை மீட்டுக் (Rewind செய்து) கேட்பது போல இயங்குமாம். அவ்வாறு இயங்கும் வேளை தான் கனவு தோன்றுவதாகப் பத்திரிகை ஒன்றில் படித்த நினைவு.
மூளை இயங்கும் செயலையே உள்ளம் (Mind) என்கிறோம். அப்படி நோக்குகையில் உணர்வு (நனவு) உள்ளம் (Conscious Mind) ஓய்வடைய உணர்வுத்துணை (நனவுத்துணை) உள்ளம் (Sub Conscious Mind), உணர்வற்ற (நனவிலி) உள்ளம் (Unconscious Mind) இயங்கும். அவ்வேளை அவை உணர்வூட்டப்பட்ட (உணர்ச்சி வசப்பட்ட) தகவலை மீள வாசித்துக்கொண்டிருக்கையில், குறித்த ஆள் உணர்வூட்டப்பட (உணர்ச்சி வசப்பட) விழித்துக் கொள்வதாகவும் அதனையே கனவு தோன்றியதாக எண்ணுகின்றனர்.
அதாவது உணர்வுத்துணை (நனவுத்துணை) உள்ளத்தில் (Sub Conscious Mind) பதியப்பட்ட தகவலாக இருப்பின் பயணம் செய்யும் போது வழியில் விபத்துக்குள்ளாக நேரிட்ட நிகழ்வு கனவாகத் தோன்றலாம். அல்லது உணர்வற்ற (நனவிலி) உள்ளத்தில் (Unconscious Mind) எழும் நடைமுறைக்குப் பொருந்தாத எண்ணங்களாக இருப்பின் அடுத்த தேர்தலில் நாட்டின் தலைவராக இடமுண்டெனக் கனவாகத் தோன்றலாம். எனவே, கனவு மெய்ப்படும் என்பதெல்லாம் பொய் என்பேன்.
இப்படித் தான் நான் படித்திருந்தாலும் “கனவுலகின் மர்மக் கோட்டைகளில் புது வெளிச்சம்” என்ற மருத்துவர் முருகானத்தன் ஐயா அவர்களின் பதிவில் “நினைவு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த தூக்கமுமற்ற முழு நினைவுமற்ற நிலை இருக்கிறது. அவ்வேளையில்தான் கனவுகள் காண்கிறோம். அவ்வாறு காணும் கனவுகளின் போது தான் கனவு காண்பதாக உணர்கிறோம்.” என்று விளக்கம் தந்து பதிவு நீண்டு செல்கிறது. அதனைத் தாங்களும் படித்து “கனவு பற்றிச் சற்று எண்ணிப் பாருங்களேன்!” என்று சொல்ல வந்தேன். கீழுள்ள அப்பதிவின் இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பயன்பெறவும்.