நம்மாளுகள் அழுகின்ற வேளை வடிக்கின்ற கண்ணீரில் பல கழிவுப்பொருள் மட்டுமல்ல மருந்துப்பொருளும் இருக்கிறதாம். ஒரு கடகம் சின்ன வெங்காயம் அரிந்தால்/நறுக்கினால்/வெட்டினால் கண்ணில் படரும் படலத்தை நீக்கச் சத்திரசிகிச்சை செய்யத் தேவையில்லை என்று ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் எனக்குச் சொல்லியிருந்தார்.
எத்தனை சொட்டுக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என்றறிய ஒரு சின்ன வெங்காயத்தை உரித்தால் போதுமே! அப்படியாயின் ஒரு கடகம் சின்ன வெங்காயத்தை நறுக்கினால், நீங்கள் கண்ணீரால் குளித்து விடுவீர்களே! அந்தக் கண்ணீரில் கலந்திருக்கும் மருந்துப்பொருள் கண்ணில் படரும் படலத்தைக் கரைத்து விடுவதனால் சத்திரசிகிச்சை செய்யத் தேவையில்லை என அந்த மருத்துவரே விளக்கம் அளித்தார்.
நான் அழும் போது என் அழுகை நிறுத்த எவரும் எனக்கு உதவவில்லை. என்ர பிள்ளையை ஏன்டா அழுவிக்கிறியள் என்று ஆச்சி கேட்க, அழுதால் தான் நோய்கள் குணமடையுமென எனக்கடித்த சித்தப்பா விளக்கமளித்தார். அந்தக் காலத்தில கண்ணீரும் கண் கண்ட மருந்து என்று நானறியேன்.
இந்தக் காலத்தில மதியுரை நாடி வருவோர் அழுதழுது தங்கள் துயரைப் பகிரும் போது நானும் தடுப்பதில்லை. முழுத் துயரையும் கேட்டறிதல் எனது நோக்காயினும் முழுத் துயரையும் பகிருவதால், குறித்த ஆள் தனது உள்ளத்துச் சுமையை இறக்கி வைக்க முடிவதால் உள்ளத்தில் அமைதி கிட்டுமென்பது என் கருத்து. எனவே, அழுகையும் கண்ணீரும் நமக்கு மருந்தாகலாம்.
அழுகையும் கண்ணீரும் தொடர்ந்தால், நா வறண்டு தண்ணீர் விடாய்க்குமே! அப்படியாயின் நம்முடலுக்குத் தண்ணீரும் தேவை தானே! அடடே! தண்ணீரும் நா வறட்சி, உடல் வறட்சி போக்கும் கண் கண்ட மருந்து என்றே சொல்லலாம். நாம் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு ஆறு லீற்றர் தண்ணீர் குடித்து வந்தால் உடல் நலம் பேணலாம் என்கிறார்கள்.
விடிகாலை எழுந்ததும் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் உடல் குளிர்மையாக இருக்குமாம். நோய்கள் வர வாய்ப்புக் குறைவாம். மேலும், தண்ணீர்ச் சிகிச்சை (Water Therapy) பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள். அது பற்றி அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilaarokyam.blogspot.com/2014/03/blog-post_86.html
மேலும், அறிஞர் புதுவை வேலு/யாதவன் அவர்கள் தனது வலைப்பூவில் “ஆரோக்கிய அமுதம் தண்ணீர்! தண்ணீர்!” என ஒரு பதிவைப் படைத்துள்ளார். அதனைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://kuzhalinnisai.blogspot.com/2015/03/blog-post_2.html
இனிய அன்புள்ளங்களே! கண்ணீரும் தண்ணீரும் கண் கண்ட மருந்து! அதற்காக அழவும் வேண்டாம், போக்குவரவு நேரத்தில், செயலகங்களில் சலம் (Urine) போகுமெனத் தண்ணீரும் குடிக்காமல் இருக்க வேண்டாம். பாவரசர் கண்ணதாசன் “இரண்டடக்கேல்” என்று சொல்லியிருக்கார். அதாவது மலம், சலம் போவதை அடக்காதீர் என்று பொருள். உண்ணுங்கள், குடியுங்கள் ஆனால் இரண்டடக்கேல் பேணுங்கள். அதுவே உளநலம் , உடல் நலம் பேண உதவும் என்பேன்.
Posted in சிறு குறிப்புகள்
குறிச்சொல்லிடப்பட்டது இரண்டடக்கேல்