Monthly Archives: ஜூன் 2014

மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய…

தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் “சிரிப்பும் சிந்தனையும் – http://www.gunathamizh.com/2014/06/blog-post_26.html ” என்ற பதிவை எல்லோரும் படித்துத் தான் ஆகவேண்டும். படங்களுடன் (கேலிச்சித்திரங்கள்) எடுத்தாளப்பட்ட உண்மைகளைப் படித்துத் தான் ஆகவேண்டும்.

நான் அவரது பதிவைப் படித்ததில் கீழுள்ளதை விரும்புகிறேன்.

முதலில் அவரது பதிவைச் சென்று படியுங்கள். அடுத்து எனது கருத்தைப் படிக்கத் தொடரலாம்.

மருத்துவம் என்பது உயிர் காக்கும் பணி. மருத்துவம் படிக்கும் வழியும் சிறந்து விளங்க வேண்டும். ஆனால், இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி அரச கல்வித் திட்டப்படி மருத்துவம் படிக்க முடியாதோர் பணமுள்ளோர் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் படித்து வெளியே தலையைக் காட்டுவோரால் மருத்துவக் கல்விக்கு மதிப்பிழப்பு ஏற்பட்டுவிட்டது. இதனை தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் பதிவு நன்றே உணர்த்துகிறது.

அன்றெல்லாம் மருத்துவர்கள் அரிது. இன்றெல்லாம் மருத்துவர்கள் அதிகம் என்றால் தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியே சான்று. இந்நிலை போலி மருத்துவர்கள் தலைகாட்ட இடமளிக்கிறது. எங்கேயோ எப்படியோ படித்தவர் போல சித்த மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் ஆங்கில (MBBS) மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளையும் வழங்கும் நிலை வந்துவிட்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் தமிழ் இலக்கியமாகவே இருக்க ஆங்கில (MBBS) மருந்துகள் எப்படி அதற்குள் நுழைந்திருக்கும்? இப்படிப் போனால் “உயிர் காக்கும் பணி” என்பது “உயிர் அழிக்கும் பணி” ஆகாதோ?

நான் ஓர் உளநல மதியுரைஞர் (Counsellor) என்ற வகையில், நோயாளிகள் எல்லோரும் அரச கல்வித் திட்டப்படி படித்த அல்லது அரச அனுமதி பெற்ற அதாவது அரச மருத்துவர் பதிவிலக்கம் பெற்றவரையே நாடவேண்டும் என்பேன். இவ்வாறே உளநல மதியுரைஞர் (Counsellor) எவரையும் நாடுவதாயின் அரச அனுமதி பெற்றவரையே நாட வேண்டும். எனவே, நோயாளிகள் தவறான இடத்தையோ தவறான ஆள்களையோ நாடினால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பும் உண்டு.

தன் (சுய) மருத்துவம் அல்லது பாட்டி மருத்துவம் மேற்கொண்டு தம்மை அழிப்பவரைப் போலவே தவறான இடத்தையோ தவறான ஆள்களையோ நாடுவோரும் தம்மை அழிக்கிறார்கள். நோயாளிகளோ நோயாளிகளைச் சூழவுள்ளோரோ உண்மையான, உண்மையற்ற மருத்துவ ஆளணிகளை அடையாளப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இது பற்றிய தெளிவை உண்மையான மருத்துவ ஆளணிகளும் ஊர்ப் பெரியோர்களும் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனால் நாட்டின் தேவையற்ற உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.

மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய விரும்பும் உறவுகளே! என் போன்றவர்கள் இப்படித் தான் மக்களுக்கு வழிகாட்டுவர். நீங்கள் அரச கல்வித் திட்டப்படி படித்து அல்லது அரச அனுமதி பெற்று அதாவது அரச மருத்துவர் பதிவிலக்கம் பெற்று மக்களுக்குப் பணி செய்ய முன்வர வேண்டும்.

அன்று யாழ்ப்பாணத்தில் (மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் மருத்துவர் கெங்காதரனும்) தனியார் மருத்துவக் கல்லூரியைத் திறக்க அன்றைய அறிஞர்கள், மருத்துவபீட யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தடுத்தமையால் நிறுத்தப்பட்டது. ஆனால், இன்று இலங்கையில் மாலபேயில் அரச அனுமதியுடன் தனியார் மருத்துவக் கல்லூரியைத் திறந்து இயங்க எவரும் பெரிதும் எதிர்த்ததாயில்லை. காலவோட்டத்தில் இது இயல்பென (இன்றைய நாகரீகமென) இருந்துவிட்டார்கள் போலும்.

ஆயினும், மக்கள் பணி என மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய விரும்புவோர் அரச கல்வித் திட்டப்படி படித்து மருத்துவரானால் மட்டுமே நன்மதிப்பை ஈட்டமுடியும். அவ்வாறானவர்களையே மக்கள் விரும்பி நாடும் காலம் நெருங்கி வருகிறது.

மனிதருக்குள்ளே உள்ள வேற்றுமைகளை விரட்ட

சாதி, மதம், இனம், ஊர், நாடு என பல வேற்றுமைகளை மனிதருக்குள்ளே பார்க்கமுடிகிறது. இதனை விரட்டி ஒற்றுமை பேணினால் எல்லோருக்கும் நன்மை உண்டு.
1.எல்லோரும் கடவுளின் படைப்பாகக் கருதுவோம்.
2. எல்லோரும் சேங்குருதிச் சாதியென அன்பு காட்டுவோம்.
3.நம்மைப் போல மாற்றானும் என அணைப்போம்.
4.பலனை எதிர்பாராது உதவுவோம். உதவுவதால் உறவைப் பேணலாம்.
5.பிறர் உதவியைப் பணிவோடு ஏற்போம். அதனால், உறவு வலுவடையும்.
6.எந்தவொரு வேறுபாட்டையும் மறந்து புதிய உறவுகளை ஏற்படுத்துவோம்.
7.உள்ள உறவுகளைப் பகைக்காமல் பேணுவோம்

“ஆயிரம் நண்பர்களை (ஆண்/பெண்) உருவாக்கலாம். ஆனால், ஓர் எதிரியை உருவாக்கிவிடாதே!” என்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். நம்மைச் சூழ அன்பால் இணையும் கூட்டம் அமைய வேண்டும். அதற்கு நாம் தான் அன்பைப் பரிசாக வழங்க வேண்டும். அப்ப தான் எதிரி உருவாக வாய்ப்பிருக்காது. அடுத்தது நம்பிக்கையைப் பேண வேண்டும். பிறர் மத்தியில் நாம் நம்பிக்கையை விதைக்காமல்; பிறரிடம் எப்படி நம்பிக்கையை அறுவடை செய்யலாம்?

முடிவாகப் பாகுபாடுகள், வேறுபாடுகளை உள்ளத்தில் இருத்தாமல் பிறர் மத்தியில் அன்பை, நம்பிக்கையை விதைத்தால் மனிதருக்குள்ளே உள்ள வேற்றுமைகளை விரட்ட வழி பிறக்கும். இதனைப் பிறரிடம் எதிர்பார்க்காமல், நாமே பிறரிடம் ஏற்படுத்த வேண்டும். இன்றே நாம் ஒவ்வொருவரும் இப்புனித முயற்சியில் இறங்குவோம்.

அடங்காச்செயல் (பிடிவாதம்) உள (மன) நோயல்ல…

முதலில் எனது “அடங்காச்செயல் (பிடிவாதம்)” என்ற கிறுக்கலைப் படித்துப் பாருங்கள். பின் உண்மை நிலையை அறிவோம்.

அடங்காச்செயல் (பிடிவாதம்) நீங்கில்
அடியோடு உள்ளம் சுத்தமாகும் – அது
நெடுநாள் நோயின்றி வாழ மருந்தாகும்
ஆனால்,
முடக்குவாதம் நீங்க மருந்துண்டு
நம்மூர்ப் பரிகாரி சொல்கின்றார்…
அடங்காச்செயல் (பிடிவாதம்) நீங்க
தன்னைத் தானுணர்ந்து
தன்நிலையை மாற்றாத வரை
மருந்து இல்லை என்பேன்!

நம்மாளுகளுக்கு ஏன் அடங்காச்செயல் (பிடிவாதம்) தொற்றிவிடுகிறது? தனது வட்டத்துக்கு வெளியே வராமல் தானென்ற குறுகிய வட்டத்துக்குள்ளே இருப்பதனால் தான் இந்நிலை. கிணற்றுத் தவளைக்கு வெளியுலகம் தெரியாது. அது போல இவர்களின் செயலைக் கண்டுகொள்ளலாம். அதற்காக இதனை உள (மன) நோய் என்று கூறக்கூடாது. இவ்வாறானவர்களுடன் பேச்சால் வெல்லமுடியாது. இவர்களுக்கு உண்மை நிலையைக் காட்சிப்படுத்தல் மூலமோ சான்றுப்படுத்தல் மூலமோ தெளிவுபடுத்த முடியும்.

அதாவது, தமது உள்ளத்தில் சில எண்ணங்களை சரியென்று பேணி வருகின்றமையால் தான் அடங்காச்செயலில் (பிடிவாதத்தில்) இறங்குகின்றனர். எப்படியாயினும் இவர்களை வெளியுலகத்திற்கு இழுத்துவர வேண்டும். பொது நிகழ்வுகளில் பங்கெடுக்க வைக்கவேண்டும். மக்கள் மத்தியில் எளிமையாகப் பழகவிட வேண்டும். பிறரைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு ஊரூராக சுற்றுலாச் சென்று வரலாம். தன் (சுய) முன்னேற்ற நூல்களைப் படிக்க வைக்கலாம்.

இவ்வாறு தமது உள்ளத்தில் பேணி வரும் தமக்குச் சரியெனப்படும் எண்ணங்களைத் தாமாகவே மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் உளப் (மனப்) பக்குவம் ஏற்பட உதவலாம். இதனால் தமது எண்ணங்களை மீளாய்வு செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. சுருங்கக் கூறின் நாம் கால மாற்றம், சூழல் மாற்றம், மக்கள் எண்ணத்தில் மாற்றம் (ஊரோடு ஒத்துப் போதல்) என எல்லாவற்றிற்கும் எம்மை மாற்றிக்கொள்ளப் பழக வேண்டும். அவ்வாறு மாறும் உலகிற்கு ஈடுகொடுக்கத் தக்கதாக எம்மைப் பேணுவதால் அளவற்ற மகிழ்ச்சியை அடையலாம்.

சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி

நீரிழிவைக் கட்டுப்படுத்தினால் – நாம்
நீடுழி மகிழ்வோடு வாழலாம் – வாழவா
நீரிழிவை விரட்டும் வழிகளை – இதோ
நீங்களும் படித்தப் பயன்பெறுங்களேன்!

சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி.

via சர்க்கரையை வெல்ல நல் வழிகாட்டி.

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?

பகலில் குட்டித் தூக்கம் என்றால்
உடல் நலம் பாதிக்கும் என்ற பேச்சு
இனி இருக்கதே! – இது
பலருக்குத் தெளிவூட்டும்
சிறந்த ஆய்வுக் கட்டுரை ஆச்சே!

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?.

via பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?.

பாலூட்டுவதை நிறுத்தி அழகைப் பேணலாமா?

மருந்துக்கடைக்கு வந்த ஒருவர் “குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் தான். அதற்குப் பால் கொடுக்க ஏதாவது மாப்பால் இருக்குதா?” என்று கேட்டார். இதைக் கேட்டதும் அருகில் இருந்த எனக்குத் தலை சுற்றியது. பின்னர் “குழந்தை பிறந்த உடனே, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டி வளர்க்கலாம். அவ்வாறானவர்கள் புட்டிப் பாலையே நாடுவர்” என்று நானும் என்னைச் சமாளித்தேன்.

“குழந்தை பிறந்து ஆறு மாதம் வரைக்கும், தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்து ஆகவேணுமே” என்று அருகில் நின்ற ஆச்சி சொன்னாள். அந்தாளோ, “பிள்ளைக்குப் பால் கொடுத்தால் தாயின் அழகு கெட்டுப் போயிடும்” என்றார். “ஆண்டவா! இதென்னடா கொடுமை இது? பாலூட்ட விரும்பாத பெண்களைப் படைத்தது உன் குற்றமே!” என்று நான் கேட்டிருந்தால் “அவர்களுக்கு நோயைக் கொடுத்து வாட்டுவதை அறியாயோ?” என்று எனக்குப் பதிலளித்திருப்பார்.

நாடு எப்படிப் போகுது என்று சொல்ல இதைவிட வேறு சான்றுமுண்டோ? தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே இதற்குக் காரணம். இதற்காகவே நேரில் நான் கண்ட காட்சியை இங்கு வெளிப்படுத்துகிறேன். இக்காட்சியே இப்பதிவை எழுதத் தூண்டியது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப் பால் தான் முழுமையான உணவு. குறைந்தது ஆறு மாதம் ஆயினும் பதினெட்டு மாதம் வரை தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டலாம். புட்டிப் பாலைவிடத் தாய்ப் பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் எங்கட தாய்மாருக்கு எப்பனும் விளங்குதில்லையே!

தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப்போகும் என்ற பேச்சை ஏற்கமுடியாது. இடையிலே வந்த அழகு இடையிலேயே போய்விடும். ஆயினும், அழகைப் பேணுகின்ற காலம் வரை அழகு இருக்கும். தாய் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.

கணவன்மாருக்கு உதைக்கிற உதையில மனைவிமார் திருந்துவினம். மனைவிமார் இளமையாய் இருக்க வேணுமென்பதற்காக தாய்ப் பாலூட்டுவதை நிறுத்த கணவன்மார் உடன்படுவது தவறு. தாய்ப் பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம்.

ஆய்வுகளின் படி புட்டிப் பாலூட்டி வளர்த்த குழந்தையைவிடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உள, உடல் நலத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தை உள, உடல் நலத்தோடு வளரத் தாய்ப் பாலூட்டுவதையே எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய இளைய பெண்களே! அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப் பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு. இது பற்றிய மேலதிகத் தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.

நோய்களை விரட்ட உடற்பயிற்சி தேவை

‘உடல் நலம் பேணப் பயிற்சிகள் தேவை’ (http://wp.me/p3oy0k-4y) என்ற எனது பதிவைப் படித்த பின் இப்பதிவைத் தொடருவது பயன்தரும். நண்பர் சிவசண் முகநூலில் பகிர்ந்த உடற்பயிற்சி வழிகாட்டல் பக்கத்தை இங்குப் படிக்கப் பதிவிறக்க வசதியாக இணைத்துள்ளேன். இதனை http://neilarey.com/workouts/walkers-workout.html தளத்தில் பதிவிறக்கினேன். நீங்களும் இது போன்ற பிற பயிற்சி வழிகாட்டல் பதிவுகளைப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாமே!

சென்ற பதிவில் உடற்பயிற்சியின் பயனைக் குறிப்பிட்டேன். உடற்பயிற்சி செய்வதால் நோய் நெருங்காது; ஆயுளை நீடிக்கலாம். குறைந்தது நாளுக்குநாள் 2km நடப்பதையோ 5km மிதிவண்டி மிதிப்பதையோ மேற்கொள்ளலாம். கீழே காட்டப்பட்ட எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்து பாருங்களேன். நீரருந்திய பின் இதனை மேற்கொள்ளக்கூடாது. நீரருந்தியிருப்பின் அரை மணி நேரம் கழித்துப் பின் தொடரவும்.

எதனால் பாலியல் அத்து மீறல்கள் நிகழுகின்றன?

அதி உணர்வு உள்ளம் (Super Consicious Mind), உணர்வு உள்ளம் (Consicious Mind), துணை உணர்வு உள்ளம் (Sub Consicious Mind), உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) என மனித உள்ளம் என்பது நான்கு வகைப்படும். இங்கு பாலியல் அத்து மீறல்கள் நிகழ உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) முக்கிய பங்காற்றுகின்றது.

மனிதனின் சிந்தனை, செயல், எண்ணம் எல்லாம் உணர்வு உள்ளம் (Consicious Mind) இல் இடம்பெறுகிறது. சுயகட்டுப்பாட்டோடு இவை பேணப்பட நல்லெண்ணங்களே துணை உணர்வு உள்ளம் (Sub Consicious Mind) இல் பதியப்படுகிறது. இங்குள்ள தகவல் மனித நடத்தைகளாக நல்லெண்ண வெளிப்பாடாகவே வெளிக்காட்டும். அதனால், மனிதனின் நல்ல முகத்தைப் பார்க்க முடிகிறது.

உணர்வு உள்ளம் (Consicious Mind) ஓய்வாக இருக்க, உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) தன் வேலையைக் காட்டத்தொடங்கிவிடும். இது நடைமுறைக்கு ஒவ்வாத எண்ணங்களைத் தோற்றுவிக்கும். எடுத்துக்காட்டாக நாட்டின் அல்லது உலகின் உயர்ந்த பதவியை அடைய விரும்புவது. அதேவேளை எதிர்ப்பாலாரைக் கண்டதும் பாலியல் உணர்வுகளை அடைய நினைப்பது. இவை உணர்வு உள்ளம் (Consicious Mind) தால் வடிகட்டப்படாமல் இருக்க உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இல் பதுங்கிக் கிடக்கும்.

இவ்வாறு உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இல் பதுங்கிக் கிடக்கும் ‘பாலியல் உணர்வுகளை அடைய நினைத்தது’ சூழல் அமைவாக இருக்க வெளியே தலையைக் காட்டும். வெளிப்பட்ட இவ்வெண்ணம் பாலியல் அத்து மீறல்களை ஏற்படுத்த உந்துகிறது. எடுத்துக்காட்டாக வெளிநாட்டுப் பெண்ணொருத்தி, தனிவீடெடுத்து இருப்பதையறிந்த பாலியல் உணர்வுகளால் உந்தும் ஆள் பாலியல் அத்து மீறல்களை மேற்கொள்ள முனைகிறார். அதாவது உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இல் உள்ள தகவல் தக்க சூழலைக் கண்டதும் அடைய முயற்சிப்பதால் மனிதனின் கெட்ட முகத்தைப் பார்க்க முடிகிறது.

இதற்கு ஒரே வழி உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) தன் வேலையைக் காட்டத்தொடங்கினால் உணர்வு உள்ளம் (Consicious Mind) ஆல் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். விரும்பிய நூல்களைப் படித்தோ இறைவழிபாட்டை மேற்கொண்டோ என ஒரு வழியில் உள்ளத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்பட்ட உள்ளமே அதி உணர்வு உள்ளம் (Super Consicious Mind) என்பேன். இந்நிலையில் உயர்ந்த நல்லெண்ணங்களையே எதிர்பார்க்கலாம்.

மணவாழ்க்கை என்பது அகவைக்கு வந்தாலும் குடும்பம் நடாத்தத் தேவையான வருவையும் வேண்டும். இதனையே பெற்றோர்கள் கவனிக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் இதனைப் பொருட்படுத்துவதில்லை. அதாவது நல்ல இடம் சந்தித்தால் மணமுடித்து வைக்கலாமெனப் பெற்றோரும் காலம் தள்ளிப் போவதை பிள்ளைகள் விரும்பாத நிலையும் காணமுடிகிறது. இதுவும் உணர்வற்ற உள்ளம் (Unconsicious Mind) இன் செயலைத் தூண்டலாம். பெற்றோர்கள் தம் நிலையைப் பிள்ளைகளுக்குப் புரிய வைத்திருந்தால் இவ்வாறு நிகழாது.

உள்ளக் கூறுகளாக Id, Ego, SuperEgo என மூன்றைக் கருதுகிறார்கள். அதாவது, பசி, தாகம், பாலுணர்ச்சி போன்ற உள்ளுணர்வுகளுக்கு Id உம் உடனடியாக அவை நிறைவேற வேண்டும் என Ego உம் அவை நெறிமுறைகளை பின்பற்றித்தான் நிறைவேற்ற வேண்டும் என SuperEgo உம் செயற்படும். கீழ்வரும் எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்க.

Id – அந்தப் பெண்ணுடன் பாலியல் உறவு வேண்டும்.
Ego – இப்பவே அது நிகழ வேண்டும்.
SuperEgo – கூடாது. அவள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனைவி அல்ல.

இங்கு Id, Ego, SuperEgo ஆகிய மூன்றிற்குமிடையே போர் நிகழும். இதில் Ego வெற்றி பெற்றால் பாலியல் அத்து மீறல்கள் நிகழும். ஆயினும் SuperEgo வெற்றி பெற்றால், மணமுடித்த பின் பார்க்கலாமென Ego இணங்கிப் போக Id, Ego, SuperEgo ஒன்றிணைந்து நல்லெண்ண வெளிப்பாட்டைத் தூண்டும்.

பெற்றோரும் ஆசிரியர்களும் வழிகாட்டிகளும் பொறுப்புள்ள ஊடகங்களும் வழிகாட்டத் தவறுவதனாலேயே பாலியல் அத்து மீறல்கள் நிகழுகின்றன. பாலியல் அத்து மீறல்கள் நிகழாதிருக்க ஊரூராக நாடெங்கும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் வழிகாட்ட வேண்டும். அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் “நிசப்தம்” தளத்தில் “பாலியல் அத்து மீறல்கள்” என்ற பதிவைப் படித்ததும் இப்பதிவை எழுத வேண்டுமென்ற விருப்பம் தோன்றியதால் இதனை எழுதினேன்.

எதனால் பாலியல் அத்து மீறல்கள் நிகழுகின்றன என்பதற்கு “பாலியல் வறட்சி தான் (Sexual Dryness) அடிப்படையான காரணம் என்கிறார்கள். ஒரு பக்கம் பண்பாடு விழுமியங்கள் என்று பாலியல் சுதந்திரங்களை கட்டுக்குள் வைக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் ஊடகங்கள் வழியாகவும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் வழியாகவும் உணர்ச்சிகளை சுண்டி விடுகிறார்கள். மற்றொரு பக்கம் மது இன்னபிற போதை வஸ்துகளை பரப்பி வைத்திருக்கிறார்கள்.” என்ற அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் தகவலைக் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது.

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி அறிஞர் வா.மணிகண்டன் அவர்களின் பதிவைப் படிப்பதனாலேயே இப்பதிவின் நோக்கம் விளங்கும்.

பாலியல் அத்து மீறல்கள்

படிப்பில் வெற்றி பெற

கண்ட கண்ட
அழகிகளைக் கண்டாலும்
காதல் ஆகாமல்
வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏதும்
காதில் விழுத்தாமல், கண்ணில் படாமல்
கண்ட கண்ட பொத்தகங்களில்
பார்வையை விழுத்திப் படித்தேன்
மருத்துவரானேன் என
படித்தவன் ஒருவன் சொல்கிறான்!
கண்ட கண்ட
பொடியளோட பழகாமலும்
காதல் ஆகாமலும் ஒதுங்கியே
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சி ஏதும்
கண்ணில் படாமலும் காதில் விழுத்தாமலும்
சமையற்கூடம்
எட்டிப் பார்க்காமலும்
வைத்த கண் வாங்காமல்
பொத்தகங்களைப் படித்தேன்
பொறியலாளரானேன் என
படித்தவள் ஒருவள் சொல்கிறாள்!
என்ர பிள்ளை குட்டிகளுக்கு
படி படியென்று – நான்
எத்தனை எத்தனை
படித்தவன், படித்தவள் கதை சொல்லியும்
படிக்கிறதக் கண்டதில்லையே!
உண்மையிலேயே
தாங்களாகவே உணர்ந்து படித்தால் தானே
படிப்பு வருமென்று
என்ர அப்பன்
எனக்குரைத்ததைத் தானே
மீட்டுப் பார்க்க முடிகிறதே!

 

உடல் நலம் பேணப் பயிற்சிகள் தேவை

உடல் நலம் பேண மருத்துவர்களிடம் ஓடி ஓடி அலைபவர்களே, சற்று நேரம் உடற்பயிற்சி செய்தால் நன்மை உண்டு. மருந்தில்லா மருத்துவத்தில் உடற்பயிற்சி தான் முதலிடம். அதாவது, உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் உள்ள குளுக்கோசின் அளவைக் குறைக்க முடியும். அதேவேளை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். அத்தோடு உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும் அளவுக்கு மீறிய கலோரி சக்தியை எரித்துக் குறைக்கவும் முடிகிறது. இதனால் கொலஸ்ரோல் மற்றும் பிற நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

உடற்பயிற்சி செய்வதால் உடற்கலங்கள், நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். அதனால் உடலின் எல்லாப் பகுதிக்கும் செந்நீர்/குருதி கொண்டு செல்லப்படும். செந்நீர்/குருதிச் சுற்றோட்டம் சீராக இயங்கத் தொடங்க உடலின் எல்லாப் பாகமும் சீராக இயங்கும்.
அதாவது, சோர்வுற்ற உடற்பகுதிகளுக்குச் செந்நீர்/குருதி சீராக கிடைப்பதால் அவை வழமைக்குத் திரும்புகின்றன. இதனால் பாலுறவுச் செயற்பாட்டுக்கு ஊக்க மாத்திரைகள் (வயாக்ரா போன்ற) தேவைப்டாது. மூளைக்குச் செந்நீர்/குருதி செல்வதால் சிறந்த முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

உடற்பயிற்சி என்று உடலை முறித்து நொறுக்க வேண்டாம். நடத்தல், துள்ளுதல், கயிறடித்தல், தோப்புக்கரணம் போடுதல் அதாவது இருந்தெழும்புதல், ஓடுதல், மிதிவண்டி மிதித்தல், நீச்சலடித்தல், கைப்பந்தடித்தல், கால்பந்தடித்தல் எனப் பல பயற்சிகளைச் செய்யலாம். இதனால் பல நோய்கள் எம்மை நெருங்காமல் பேணலாம். அதற்கு முன் உங்கள் உடல் நலம் பற்றி மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே உடற்பயிற்சி செய்யவேண்டும்.

மருந்தில்லா மருத்துவத்தில் அடுத்து யோகாசனமும் பேசப்படுகிறது. இந்த நோய்க்கு இந்த யோகாசனம் செய்தால் நன்று என்றும் சொல்லப்படுகிறது. நூல்களைப் படித்து, அதன்படி யோகாசனம் செய்யக்கூடாது. யோகாசனத்தில் சிறந்த புலமையுள்ள ஆசிரியரின் வழிகாட்டலின் படியே அதனைச் செய்து பழக வேண்டும். இதனாலும் பல நோய்கள் எம்மை நெருங்காமல் பேணலாம். அதற்கு முன் உங்கள் உடல் நலம் பற்றி மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே யோகாசனம் செய்யவேண்டும்.

“சமச்சீரான உணவு உண்டு, உடற்பயிற்சி (விரும்பின் யோகாசனம்) செய்து வந்தால் நோய்களை நெருங்காமல் பேணலாம் என்று சொல்லிப்போட்டுப் பிறகேன் உடல் நலம் பற்றி மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே அவற்றைச் செய்யலாம் என்று சொல்கிறீர்கள்.” என்று நீங்கள் என்னைக் கேட்கலாம்.

எல்லோரும் மதியுரை சொல்லலாம். அதனால் விளையும் பின்விளைவை மதியுரைப்படி செயற்படுபவரே ஏற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது. அதன்படிக்கு ஒவ்வொருவர் உடல் நிலைக்கு ஏற்ப ஒரிரு உடற்பயிற்சிகளைச் செய்யலாம்; எல்லாம் செய்ய இயலாது. நோய்கள் நெருங்காமல் பயிற்சிகளைச் செய்யப்போய் வேண்டாத நோய்களை வேண்டிச் சேர்த்ததாக இருக்கக்கூடாது. ஆகையால் எவர் எந்தெந்தப் பயிற்சிகளைச் செய்யலாம் என்பதை மருத்துவருடன் கலந்துரையாடி அவரது மதியுரைப்படியே செய்யவேண்டும்.

சுழலும் நாற்காலியில் சுற்றிக்கொண்டு வேலை பார்ப்போர், மூக்குமுட்டத் தின்ற பின் நீட்டி நிமிர்ந்து கிடப்போர், கடின உழைப்பை மேற்கொள்ளாதோர், ஊதிப் பெருத்த உடலை உடையோர் போன்றோருக்கே இலகுவில் நோய்கள் நெருங்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறானோர் எளிமையான உடற்பயிற்சிகளைச் செய்யலாமே! அதற்காக “உங்களுக்காக” என்ற தளத்திலிருந்து “அன்றாட வேலையில் அதிக கலோரியை எரிக்கலாம்!” என்ற பதிவை அறிமுகம் செய்கிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிச் சென்று படிக்கவும்.

http://wp.me/pewfk-5ZU