தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் “சிரிப்பும் சிந்தனையும் – http://www.gunathamizh.com/2014/06/blog-post_26.html ” என்ற பதிவை எல்லோரும் படித்துத் தான் ஆகவேண்டும். படங்களுடன் (கேலிச்சித்திரங்கள்) எடுத்தாளப்பட்ட உண்மைகளைப் படித்துத் தான் ஆகவேண்டும்.
நான் அவரது பதிவைப் படித்ததில் கீழுள்ளதை விரும்புகிறேன்.
முதலில் அவரது பதிவைச் சென்று படியுங்கள். அடுத்து எனது கருத்தைப் படிக்கத் தொடரலாம்.
மருத்துவம் என்பது உயிர் காக்கும் பணி. மருத்துவம் படிக்கும் வழியும் சிறந்து விளங்க வேண்டும். ஆனால், இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி அரச கல்வித் திட்டப்படி மருத்துவம் படிக்க முடியாதோர் பணமுள்ளோர் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் மருத்துவம் படித்து வெளியே தலையைக் காட்டுவோரால் மருத்துவக் கல்விக்கு மதிப்பிழப்பு ஏற்பட்டுவிட்டது. இதனை தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் பதிவு நன்றே உணர்த்துகிறது.
அன்றெல்லாம் மருத்துவர்கள் அரிது. இன்றெல்லாம் மருத்துவர்கள் அதிகம் என்றால் தமிழறிஞர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியே சான்று. இந்நிலை போலி மருத்துவர்கள் தலைகாட்ட இடமளிக்கிறது. எங்கேயோ எப்படியோ படித்தவர் போல சித்த மருத்துவர்களும் ஆயுர்வேத மருத்துவர்களும் ஆங்கில (MBBS) மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளையும் வழங்கும் நிலை வந்துவிட்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள் தமிழ் இலக்கியமாகவே இருக்க ஆங்கில (MBBS) மருந்துகள் எப்படி அதற்குள் நுழைந்திருக்கும்? இப்படிப் போனால் “உயிர் காக்கும் பணி” என்பது “உயிர் அழிக்கும் பணி” ஆகாதோ?
நான் ஓர் உளநல மதியுரைஞர் (Counsellor) என்ற வகையில், நோயாளிகள் எல்லோரும் அரச கல்வித் திட்டப்படி படித்த அல்லது அரச அனுமதி பெற்ற அதாவது அரச மருத்துவர் பதிவிலக்கம் பெற்றவரையே நாடவேண்டும் என்பேன். இவ்வாறே உளநல மதியுரைஞர் (Counsellor) எவரையும் நாடுவதாயின் அரச அனுமதி பெற்றவரையே நாட வேண்டும். எனவே, நோயாளிகள் தவறான இடத்தையோ தவறான ஆள்களையோ நாடினால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பும் உண்டு.
தன் (சுய) மருத்துவம் அல்லது பாட்டி மருத்துவம் மேற்கொண்டு தம்மை அழிப்பவரைப் போலவே தவறான இடத்தையோ தவறான ஆள்களையோ நாடுவோரும் தம்மை அழிக்கிறார்கள். நோயாளிகளோ நோயாளிகளைச் சூழவுள்ளோரோ உண்மையான, உண்மையற்ற மருத்துவ ஆளணிகளை அடையாளப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இது பற்றிய தெளிவை உண்மையான மருத்துவ ஆளணிகளும் ஊர்ப் பெரியோர்களும் மக்களுக்கு வழங்க வேண்டும். இதனால் நாட்டின் தேவையற்ற உயிரிழப்புகளைத் தடுக்கலாம்.
மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய விரும்பும் உறவுகளே! என் போன்றவர்கள் இப்படித் தான் மக்களுக்கு வழிகாட்டுவர். நீங்கள் அரச கல்வித் திட்டப்படி படித்து அல்லது அரச அனுமதி பெற்று அதாவது அரச மருத்துவர் பதிவிலக்கம் பெற்று மக்களுக்குப் பணி செய்ய முன்வர வேண்டும்.
அன்று யாழ்ப்பாணத்தில் (மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையும் மருத்துவர் கெங்காதரனும்) தனியார் மருத்துவக் கல்லூரியைத் திறக்க அன்றைய அறிஞர்கள், மருத்துவபீட யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தடுத்தமையால் நிறுத்தப்பட்டது. ஆனால், இன்று இலங்கையில் மாலபேயில் அரச அனுமதியுடன் தனியார் மருத்துவக் கல்லூரியைத் திறந்து இயங்க எவரும் பெரிதும் எதிர்த்ததாயில்லை. காலவோட்டத்தில் இது இயல்பென (இன்றைய நாகரீகமென) இருந்துவிட்டார்கள் போலும்.
ஆயினும், மக்கள் பணி என மருத்துவராகி நாட்டுக்குப் பணி செய்ய விரும்புவோர் அரச கல்வித் திட்டப்படி படித்து மருத்துவரானால் மட்டுமே நன்மதிப்பை ஈட்டமுடியும். அவ்வாறானவர்களையே மக்கள் விரும்பி நாடும் காலம் நெருங்கி வருகிறது.