Monthly Archives: மே 2015

நடைபேசிகளும் நடைப்பிணங்களும்

நடைபேசிப் பாவனை அதிகம் ஆகிவிட்டது. ஆளுக்கு ஒன்றல்ல ஒன்றிற்கு மேற்பட்ட நடைபேசிகளைக் கையாளுகின்றனர். ஆயினும், நடைபேசிகளைக் கையாளும் ஒழுக்கநெறியைக் கவனத்தில் கொள்ளாது நம்மாளுகள் நடைபேசிகளைக் கையாளுவதால் தேவையற்ற உயிரிழப்புகளைச் சந்திக்கின்றனர்.

மேலுள்ள படம் தினகரன் செய்திப் பிரிவினரால் முகநூலில் வெளியிடப்பட்டது. அதனை நம்மாளுகள் விழிப்புணர்வு பெறும் நோக்கில் மீளப் பதிவு செய்கிறேன்.

மழைக்காலம், இடிமின்னல் வேளை நடைபேசிகளைக் கையாளும் போது இடிதாக்கி நம்மாளுகள் தேவையற்ற சாவைச் சந்திக்கின்றனர். இது பற்றிப் பலர் வழிகாட்டினாலும் கூட, எவரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.

நடைபேசிகளுக்கு மின்னைச் சேமிக்கும் (Charging) வேளை தொலைவில் உள்ள ஒருவருடன் நடைபேசி ஊடாகக் கதைக்கக் கூடாது என்பர். அதாவது, நடைபேசி வெப்பமேறுதல் அல்லது மின்னிணைப்பில் தீப்பற்றல் அல்லது வேறு காரணங்களால் நடைபேசி ஊடாகக் கதைப்பவர் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

அடடே!
மேலுள்ள படம்
எதனைச் சுட்டிக் காட்டுகிறது
இடது புறம்
மின்னேற்றி (Charger) எரிந்து கிடக்கிறது
நடுவே
அப்பிள் நடைபேசி வெடித்துக்கிடக்கிறது
வலது புறம்
நம்மாளு மூஞ்சி சிதறிக்கிடக்கிறது
இந்தப் படத்தை – என்
இல்லாளுக்குக் காட்ட
தலையைச் சுற்றுகிறது என்று ஒதுங்கினாள்
எனக்குக் கூட
உள்ளத்தைத் தாக்கிய படம் தான்
இந்தப் படத்தைப் பார்த்தாவது
நடைபேசிப் பேச்சாளர்கள் – தங்கள்
உயிரைக் காப்பாற்றுவார்களாயின் – அதுவே
இன்றைய தேவை என்பேன்!

இலத்திரனியல் கருவிகள் (தொலைக்காட்சி, வானொலி, கணினி, நடைபேசி) மட்டுமல்ல வேறெந்தக் கருவிகளைக் கையாள முற்பட்டாலும் அதனைக் கையாளும் வேளை பின்பற்றவேண்டிய வழிகாட்டலையும் மதியுரையையும் (ஆலோசனையையும்) கருத்திற்கொள்ளுமாறு பணிவாக வேண்டிக்கொள்கின்றேன்.

இதெல்லாம் இன்றைய மருத்துவர்களுக்குத் தெரியாதே!

சுகாதாரமும் மருத்துவ நிலைய முகாமைத்துவமும் என்ற பாடநெறியை கடிதமுலம் படித்தேன். அதனை வைத்து ‘மருத்துவ நிலையங்களில்’ என்ற பிரிவில் பல பதிவுகளைத் தர இருந்தேன். அதில் முறையற்ற மருத்துவர்களும் ஒழுங்கற்ற மருத்துவ நிலையங்களும் இருப்பதில் பயனில்லை என எழுத இருந்தேன்.

அதற்கு முன்னோடியாக “நாட்டு மருத்துவத்தின் நான்கு கூறுகள்: இவை இப்போதும் பொருந்தும்!” என்ற தலைப்பில் அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின் ஊமைக்கனவுகள் தளத்தில், அவர் வெளிக்கொணர்ந்த பதிவை உங்களுடன் பகிரலாமென விரும்புகின்றேன்.

மருத்துவ நிலையங்களின் முகாமைத்துவத்தினரும் பணம் செலவழித்து மருத்துவம் படித்தமையால் செலவழித்த பணத்தை ஈட்டும் நோக்கில் பணியாற்றும் மருத்துவர்களும் தெரிந்திருக்க வேண்டிய நான்கு கூறுகளை அறிஞர் ஜோசப் விஜூ அவர்கள் இலக்கியச் சுவைமிகு பதிவாக அலசி உள்ளார். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அதனைப் படித்துப் பாருங்களேன்.
http://oomaikkanavugal.blogspot.com/2015/05/blog-post_22.html

புண் ஆறாமல் உறவு இல்லையே!

வாய் இருந்தால் வங்காளம் சுற்றி வரலாம் என்பர். அந்த வாயாலே தான் இயமன் உலகத்துக்கும் (இயமலோகத்துக்கும்) செல்கிறார்கள். என்னம்மா கண்ணு? இதெல்லாம் விளங்குமா?

பேச்சாற்றல் இருந்தால் வங்காளம் மட்டுமல்ல உலகமே சுற்றி வரலாம். அதே பேச்சாற்றல் மாற்றாரின் வயிற்றெரிச்சலை ஏற்படுத்த, அது மோதலாகிப் பின் சாவிலே முடியலாம்.

இனி உண்மையை உணருவோமா! “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!” என்று முன்னோர்கள் சொன்னதில் பிழையேதும் இருக்காதே! மூடிய உள்ளக் கதவைக் கூடத் திறக்க வைக்கும் சக்தி அன்புக்கு உண்டென்பதே பொருள். அதே உண்மையைக் காண அன்பொழுகத் தேனொழுக அள்ளி அணைத்துப் பேசிப் பழகுங்கள்.

அன்பு முற்றினால் காதல்!
காதல் முற்றினால் திருமணம்!
திருமணம் முடிந்தால் குடும்பம்!
குடும்பம் என்று இறங்கிவிட்டால்
பிள்ளைகள் பிறக்கத் தான் செய்யும்!
ஆயினும்
எல்லாக் குடும்ப உறவுகளையும்
அன்பாலே கட்டிப் போடலாமே – அதை
எந்நாளும் மறக்க எவருமில்லையே!

பேச்சிலே அன்பில்லை என்றால் வெறுப்புத் தான் வரும்! வெறுப்படையப் பேசியிருந்தால் உறவுகள் முறிவடையத் தான் இடமிருக்கும். முறிவடைந்த உறவுகளால் என்றைக்கும் தலையிடி தான்.

நம்மாளுகளுக்குக் கோபம் தலைக்கேறினால் செந்நீர் (குருதி) தலைக்கேறாது. அதனால், மூளை செயற்பட மறுக்கும். அந்நேரம் நம்மாளுகள் கண்ட கண்ட சொல் கணைகளைச் செலுத்திவிடுவர். அவை போய் அடுத்தவர் உள்ளத்தைப் புண்ணாக்கும். பிறகென்ன புண் ஆறாமல் உறவு என்ற பேச்சுக்கு இடமிருக்காதே!

“வில்லம்பு பட்ட புண் உள் ஆறும்;
ஆறாதே சொல் அம்பு பட்ட புண்.” என்றும்

“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.” என்றும்

சும்மாவா பெரியவங்க சொல்லி வைச்சாங்க! அப்ப உள்ளப் புண் ஆறாமைக்கு என்ன காரணம்? மருந்து போட வசதி இல்லையா? நல்ல கேள்வி தான்.

உள்ளத்தில் ஆழமாகப் (sub conscious mind – ஆழ் மனத்தில்) பதிந்துள்ள விருப்பமற்றவை; அவற்றை விதைத்தவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியாறு இருக்கும். இதுவே உள்ளப் புண் எனலாம். உள்ளம் என்பது மூளை செயற்படும் அமைவு எனின் மருந்து போட வசதி இல்லைத் தான். ஆயினும், உள்ளப் புண்ணை ஆற்றுப்படுத்தலாம் (ஆறவைக்கலாம்).

அதாவது, உள்ளத்தில் ஆழமாகப் (sub conscious mind – ஆழ் மனத்தில்) விதைக்கப்பட்டவை; விதைத்தவர் அடையாளம் அல்லது செயலைக் கண்டதும் வெறுப்பின் விளைவுகளை வெளிப்படுத்தும். எனவே, விதைத்தவர் அடையாளம் அல்லது செயல் நுகரப்படாமல் பேணினால் உள்ளப் புண்ணை ஆற்றுப்படுத்தலாம் அல்லது ஆறவைக்கலாம்.

ஆயினும், சம்பந்தப்பட்டவர்கள் உள்ளம் திறந்து பேசித் தவறுகளை ஏற்று விட்டுக்கொடுப்புகளைச் செய்து அன்பைக் கொடுத்துவேண்டி (பரிமாறி) ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமும் உள்ளப் புண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றுப்படுத்தலாம் அல்லது ஆறவைக்கலாம். அதேவேளை உறவையும் மேம்படுத்த முடியும். ஆளுக்காள் எட்ட விலகிச் செல்வதால் உறவுகள் மேம்பட வாய்ப்பிருக்காது.

“நன்மை செய்யப் பிறந்த – நீ
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாமலிரு!” என்ற
விவேகானந்தரின் வழிகாட்டலை
“அன்பைப் பகிரப் பிறந்த – நீ
அன்பைப் பகிராவிட்டாலும்
சுடுசொல் பேசாமலிரு!” என்று
மாற்றிப் பின்பற்றுவோம் வாருங்கள்!

நம்ம சூழலில் எவருடைய உறவு முறிந்தாலும்; அதனைக் கேள்விப்பட்டதும்
“வாயைக் கொஞ்சம் சும்மா வைச்சிருக்கேலாமல்
ஏதாவது, வாயாலே உளறி இருந்திருக்கலாம்” என்றும்
“வேண்டாத பேச்சாலே வெட்டுப்பட்டதே
(வெட்டு ஒன்று துண்டு இரண்டாக)
விருப்புக்குரிய உறவுகளே!” என்றும்
நம்மாளுகள் பேசிக்கொள்வதும் வழக்கம் தானே!

உறவு முறிய, மோதல் தொடங்க ஒரே வழி சுடுசொல் பேசுவது தான். அப்படியாயின் நன்றாகப் பேசலாம். ஆனால், நாம் பேசிய எல்லாம் நம்மைக் கட்டுப்படுத்தும்; நாம் பேசாத எல்லாவற்றையும் நாமே கட்டுப்படுத்தலாம்.

அன்பை வெளிப்படுத்தும் சொல்லையோ சுட்டெரிக்கும் சுடுசொல்லையோ உச்சரிக்க நாக்குத் தேவை. நரம்பில்லாத நாக்காலே எதையும் சொல்லலாம். அப்படியாயின் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது,
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.” என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

நல்ல நட்பு, நல்ல காதல், நல்ல குடும்பம், நல்ல உறவு தேவையாயின் உங்கள் பேச்சிலே அன்பு என்னும் தேன் கலந்து பேசுங்கள். தேன் போன்று தித்திக்கும் உங்கள் பேச்சைக் கேட்டு எல்லோரும் உங்கள் மீது அன்பு காட்டுவர். அதனால், உள்ளப் புண்ணும் ஏற்படாது; உறவுகளும் முறியாதே!