Monthly Archives: ஜூலை 2013

குடும்ப நலம் பற்றிய விசாரிப்பு

குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களை நீங்கள் கண்டிருப்பியள். பெரும்பாலும் அவர்கள் காதல் தொடங்கிப் பிள்ளைகள் எண்ணிக்கை வரை விசாரிப்பர். காதல் முறிவு, கலியாண முறிவு, குடும்ப மோதல், குடும்ப இழிநிலை எனப் பலதும் பத்தும் அக்கறையாக விசாரிப்பர். அப்படி விசாரித்தால் தானே, அவர்களால் ஊருக்குள்ளே செய்தி பரப்ப வாய்ப்புண்டு.

இவ்வாறு செய்தி பரப்புவோரால், பாதிப்புற்றவர்கள் பலர் இருக்கலாம். குடும்பத்திலே, வீட்டிற்குள்ளே நடந்தது வேறு, ஊருக்குள்ளே உலாவுவது வேறாக இருக்கலாம். அதாவது, ஒன்றைப் பத்தாகப் பரப்புவதே குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களின் வேலையாக இருக்கும்.

இவ்வாறு குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு வேலை வைக்காது குடும்பம் நடாத்துவது எப்படி? இதுவே எனது முதலாம் கேள்வியாக எழுகின்றது.

கணவன்-மனைவி ஒற்றுமை என்றால்
குடும்பத்துக்குள்ளே
என்னவோ எல்லாம் நடக்கலாம்
ஏதாச்சும் ஊருக்குள் ஊலாவ மறுப்பதேன்?
வாழ்க்கையில் ஆயிரமிருந்தாலும்
காட்டுத் தீபோல வீட்டுச் செய்தி
பரவுவதைத் தடுப்பது தான்
கணவன்-மனைவி ஒற்றுமையே!

மேலேயுள்ள எனது பா(கவிதை) வரிகளை படித்துப் பாருங்கள். கணவன்-மனைவி இருவருக்குமிடையே ஒற்றுமை இருந்தால் மட்டும் போதாது காதலர் இருவருக்குமிடையே ஒற்றுமை இருந்தாலும் கூட அவர்களது செய்தி எதுவும் அடுத்தவருக்குத் தெரிய வாய்ப்பில்லையே! அதாவது, நல்ல குடும்பத்திற்கு ஒற்றுமை தான் முதலாம் சொத்து.

கருத்தொற்றுமை, விருப்பொற்றுமை, இலக்கொற்றுமை (எதிர்பார்ப்பொற்றுமை), பண்பாட்டொற்றுமை என எல்லா ஒற்றுமை இருந்தால் அன்பும் (பாசமும்) பற்றும் தானாகவே வந்து சேரும். குடும்ப நலம், பாலியல் சுகம், வாழ்வின் வெற்றிகள் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றிலும் ஒற்றுமை வேண்டும். அதற்குப் புரிந்துணர்வு வேண்டும்.

புரிந்துணர்வு என்றால் என்ன? ஒருவரை ஒருவர் புரிந்து உணர்ந்து நடத்தலே! அதெப்படிச் சரிப்பட்டு வரும்? ஒருவர் விருப்பை அடுத்தவர் ஏற்றல் அல்லது ஒருவர் விரும்பாததை அடுத்தவர் வெறுத்தல் அதாவது ஒருவர் விருப்புவெறுப்பை மதித்து விட்டுக்கொடுக்கும் எண்ணத்தைப் பேணினால் புரிந்துணர்வு தானாவே வந்துவிடும்.

புரிந்துணர்வு உண்டென்றால் எவரும் எவர் மீதும் எரிந்து விழ வாய்ப்பில்லை. ஒருவருக்கொருவரிடையே முரண்பாடுகள் முளைக்காவிட்டால் குடும்பப் பிரிவிற்கு இடமில்லை. அதேவேளை குடும்ப நலம் பற்றி விசாரிப்பவர்களுக்கு வேலையும் இல்லை. அதாவது குடும்ப நலம் பற்றி விசாரித்த பின்னர் ஊரெங்கும் பரப்புவோருக்கு உள்வீட்டுச் செய்தியுமில்லை.

அது மட்டுமா, குடும்ப நலம் விசாரித்துக் கணக்குப் பிணக்குகளை தீர்த்துவைத்து மகிழ்வான வாழ்வமைக்க மதியுரை (ஆலோசனை) கூறும் என் போன்ற உளநல / குடும்பநல மதியுரை (ஆலோசனை) வழங்குவோருக்கும் வேலை இல்லை. எனவே, மகிழ்வான வாழ்வுக்கு குடும்பத்தில் ஒற்றுமை வேண்டும்.

அன்பு இருந்தால் ஒற்றுமை வரும். ஒற்றுமை இருந்தால் அன்பு வரும். அன்பும் ஒற்றுமையும் இருந்துவிட்டால் வாழ்வில் உச்ச மகிழ்ச்சியை அடைந்துவிடலாம். என் குடும்ப நிலையை மட்டும் கருதாமல், பலரது குடும்ப நலம் பற்றி விசாரித்ததை வைத்து இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறேன்.

கர்ப்பம் தரிக்க ஏற்ற காலம்

இணையத் தளமொன்றில் “கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..!!” என்றொரு பதிவில் “எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம். நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்கச் சந்தர்ப்பம் அதிகம்?” என டாக்டரிடம் கேட்டிருப்பதைக் கண்டேன். அதற்கான பதிலாக அமையும் வண்ணம் ஒரு பதிவைத் தரமுனைகின்றேன்.

முதலில் நான் டாக்டர் இல்லை. இணைய வழியில் உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) வழங்கும் ஒருவர்.

மேலே சுட்டப்பட்ட கேள்வி புதுமணத் தம்பதிகளுக்கு வழிகாட்டும் பதிலைத் தருமாறு கேட்டு நிற்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கு எனது பதில் நன்மை தருமென நம்புகிறேன்.

மணமான கணவன்-மனைவி கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் அறிந்து உடலுறவு வைத்துக்கொள்வதால் விரைவாகக் குழந்தையை எதிர்பார்க்கலாம். கர்ப்பம் தரிக்கக்கூடிய காலம் என்பது ஆணுக்கல்ல; பெண்ணுக்கே உரித்தாகிறது. ஆகையால், பெண்களே இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

பெண்களின் கருப்பையில் உருவாகும் முட்டையும் ஆண்களால் வெளியேற்றப்படும் உயிரணுவும் இணைவதால்(உடலுறவு வைத்துக்கொள்வதால்) கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது.
அப்படியாயின், அதற்கேற்ற காலம் எது?

பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஐந்தாறு நாள்களுக்கும் அடுத்து வரவுள்ள மாதவிடாய்(வீட்டுத்தூரம்) நாளிற்கு முன் ஐந்து நாள்களுக்கும் கணவன்-மனைவி உடலுறவை மேற்கொள்ளாது எஞ்சிய நாள்களில் உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்குமெனப் பலர் கூறலாம்.

ஆயினும், பெண்ணிற்கு மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து பன்னிரண்டாம் நாளின் பின் பதினெட்டாம் நாள் வரை கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. குழந்தையை எதிர்பார்த்து இருப்போர் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

13,14,15,16,17 ஆம் நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதற்காக மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஆறு நாள்களுக்குள் கூடாமல் எஞ்சிய நாள்களில் கூடினால் குழந்தை கிடைக்க வாய்ப்பு இல்லை என்பது பொய். இதனைக் கருத்திற் கொண்டு குழந்தை பெறுவதைப் பிற்போடுவோர் ஆணுறைகளைப் பாவிக்கலாம்; அல்லது மருத்துவரை அணுகலாம்.

உண்மை என்னவென்றால், மாதவிடாய்(வீட்டுத்தூரம்) வந்து ஆறு நாள்களின் பின்னர் தான் பெண்களின் கருப்பையில் புதிய முட்டைகள் உருவாகும். ஆயினும், அவை பெரும்பாலும் 13,14,15,16,17 ஆம் நாள்களில் தான் கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுகின்றன. சில முட்டைகள் முந்தியோ பிந்தியோ கர்ப்பம் தரிக்கத் தகுதி பெறுவதால் எதிர்பார்க்காத விதத்தில் ஏனைய நாட்களிலும் கணவன்-மனைவி உடலுறவைப் பேணினால் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கிறது.

புதுமணத் தம்பதிகளே! இளம் இணையர்களாயின் ஓராண்டு மேற்படி முயற்சி செய்து பாருங்களேன். முப்பது அகவையைத் தாண்டினால் மேற்படி ஆறு மாத காலம் முயற்சி செய்து பாருங்களேன். மேற்குறிப்பிட்ட காலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாது போனால், உடனடியாக மகப்பேற்று மருத்துவரை நாடவும்.